தமிழக அரசியலில் புதிய சகாப்தம் தொடங்கி உள்ளதை 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி உள்ளன.. தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக திராவிடக் கட்சிகளின் கோட்டையை தகர்த்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.. முதல் தேர்தலிலேயே இவ்வளவு பெரிய வெற்றி என்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது..
தற்போதைய நிலவரப்படி தவெக 107 இடங்களில் முன்னிலை வகித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. ஆளுங்கட்சியான திமுக 74 இடங்களிலும் அதிமுக 53 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது..
விஜய் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.. அதே போல் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் வெற்றி பெற்றுள்ளனர்.. வாக்கு எண்ணிக்கை இன்னும் முழுமையாக நிறைவடையாத நிலையில் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக விஜய் பொறுப்பேற்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.. எனினும் பெரும்பான்மை பெற 118 இடங்கள் தேவை என்பதால் இப்போதைக்கு தொங்கு சட்டசபை உருவாகும் நிலை உள்ளது..
இந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் ' தமிழகச் சட்டமன்றத் தேர்தல்களில் NDA-வை ஆதரித்த தமிழக வாக்காளர்களுக்கு எங்களது நன்றிகள். மக்களின் பிரச்சினைகளைக் களைவதிலும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் நாங்கள் எப்போதும் முன்னணியில் இருப்போம். சிறப்பான தேர்தல் செயல்பாட்டை வெளிப்படுத்திய தவெகவுக்கு எங்களது வாழ்த்துகள்.
தமிழகத்தின் முன்னேற்றத்தையும், மக்களின் நலனையும் முன்னெடுத்துச் செல்வதில் மத்திய அரசு தனது அனைத்து முயற்சிகளையும் முழுமையாக மேற்கொள்ளும்.' என்று குறிப்பிட்டுள்ளார்..

