திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு, திருமலையில் உள்ள அனைத்து உணவகங்களிலும் காலிஃபிளவர் சார்ந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்வதற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் தற்காலிகமாகத் தடை விதித்துள்ளது. சமீபத்தில் உணவகங்களுக்குக் கொண்டுவரப்பட்ட காலிஃபிளவர்களில் புழுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்தே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவில் எவ்வித சுகாதாரக் குறைபாடும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, கோபி மஞ்சூரியன், கோபி ரைஸ் உள்ளிட்ட காலிஃபிளவர் உணவுகளின் விற்பனையை உடனடியாக நிறுத்தி வைக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இது நிரந்தரத் தடை அல்ல என்றும், தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட தற்காலிக நடவடிக்கை மட்டுமே என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, TTD சுகாதாரத் துறை துணை நிர்வாக அதிகாரி சோமநாராயணா தலைமையில் உணவக உரிமையாளர்களுடனான சிறப்புக் கூட்டமும் அண்மையில் நடத்தப்பட்டு, உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை எவ்வித சமரசமுமின்றிப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது.
திருமலையில் உணவுப் பாதுகாப்பு குறித்து தேவஸ்தானம் இத்தகைய நடவடிக்கைகளை எடுப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பாகவே, பக்தர்களின் உடல்நலனுக்குக் கேடு விளைவிக்கக்கூடிய சைனீஸ் வகை துரித உணவுகளுக்கு திருமலையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் மற்றும் ஃபாஸ்ட் புட் கடைகளில் பாரம்பரியமான மற்றும் ஆரோக்கியமான உணவு வகைகளை மட்டுமே வழங்க வேண்டும் என்று தேவஸ்தானம் ஏற்கனவே கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
மேலும், உணவின் தரம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கடந்த ஜூன் மாதம் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்துடன் (FSSAI) இணைந்து சிறப்புப் பயிற்சி முகாம் ஒன்றும் நடத்தப்பட்டது. இதில் திருமலையில் உள்ள 325 உணவகங்களைச் சேர்ந்த சுமார் 1,300 சமையல் கலைஞர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, உணவைச் சுகாதாரமாகத் தயாரித்தல் மற்றும் பாதுகாத்தல் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இதுமட்டுமின்றி, திருமலையில் தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு வழங்கப்படும் ‘அன்னப்பிரசாதம்’ திட்டத்திற்குத் தேவையான காய்கறிகளின் தரம், கொள்முதல் மற்றும் சேமிப்பு முறைகளையும் அதிகாரிகள் தொடர்ந்து தீவிரமாகத் கண்காணித்து வருகின்றனர்.

