Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பரபரப்பு.. ஸ்ரீரங்கத்தில் தவெக தேர்தல் அலுவலகம் தீ வைத்து எரிப்பு..!

பரபரப்பு.. ஸ்ரீரங்கத்தில் தவெக தேர்தல் அலுவலகம் தீ வைத்து எரிப்பு..!

1News Nation 2 weeks ago

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்குமான சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. மொத்தம் 4.88 கோடி வாக்காளர்கள் வாக்களித்த நிலையில், 85.15% வாக்குகள் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. பல்வேறு கருத்துக்கணிப்புகளிலும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அதிகபட்சம் 5 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் தவெக தேர்தல் அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் மர்ம நபர்கள் அலுவலகத்திற்கு தீ வைத்து எரித்த சம்பவம் அரசியல் சூழ்நிலையை மேலும் பதற்றமாக்கியுள்ளது. ஸ்ரீரங்கம் தொகுதியில் தவெக வேட்பாளராக போட்டியிட்ட ரமேஷ், இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த பதாகைகள் அனைத்தும் கிழிக்கப்பட்டு, பின்னர் தீ வைத்து எரிக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக தவெக ஆதரவாளர்களுக்கு எதிராக திட்டமிட்ட வன்முறையை ஏற்படுத்த முயற்சி நடைபெறுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சிசிடிவி காட்சிகளும் வெளியாகி இருக்கின்றன. அதில், இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் நள்ளிரவில் அலுவலகம் முன்பு இருந்த பதாகைகளை கிழித்து, பின்னர் தீ வைத்து எரிக்கும் காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக கொண்டு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: 1News Nation