2026 சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. ஆனால் ஆட்சியமைக்க, தவெகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அடுத்தது தொங்கு சட்டசபை அமையும் என்று கூறப்படுகிறது..
இதனிடையே தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக காங்கிரஸ் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் மதவாத சக்திகளை கூட்டணியில் இணைக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் தவெக உடன் கூட்டணி அமைப்பதாக காங்கிரஸ் கூறியுள்ளது.. இதனால் தவெக ஆதரவு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 113ஆக உயர்ந்துள்ளது.. தவெக ஆட்சியமைக்க மேலும் 5 எம்.எல்.ஏக்கள் தேவை.. எனவே தவெக விசிக, கம்யூனிஸ்ட், பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது..
தவெக தலைவர் விஜய், தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.. இன்று மக்கள் மாளிகைக்கு சென்ற பொறுப்பு ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.. அப்போது தவெக மூத்த நிர்வாகிகள் செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், வெங்கட் ரமணன் ஆகியோர் உடனிருந்தனர்.
எனினும் 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை வழங்காததால் விஜய் 2 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டார். அதாவது விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து 48 மணி நேரத்திற்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்..
விஜய் நாளை முதல்வராக பதவியேற்பாரா என்பதில் குழப்பம் நீடிக்கிறது.. பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏக்களின் விவரத்தை விஜய் தரவில்லை என ஆளுநர் மாளிகை வட்டார தகவல் தெரிவிக்கின்றன.. எனவே விஜய் நாளை முதல்வராக பதவியேற்பதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது..
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் தவெக எம்.எல்.ஏக்களின் பொறுப்பற்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன.. தவெக சார்பில் தஞ்சையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய் சரவணன் மது போதையில் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்.எல்.ஏ இப்படி பொதுவெளியில் ஆட்டம் போடுவது பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.. இவர் மீது விஜய் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி வருகின்றனர்..

