தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் இன்று மேற்கொள்ள இருந்த பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் புதிதாக களம் காணும் தவெகவும் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. அந்த வகையில் தவெக சார்பில் போட்டியிடும் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். பெரம்பூர் தொகுதியிலும், திருச்சி கிழக்கிலும் தன்னை வேட்பாளராக அறிவித்த விஜய் வேட்புமனு தாக்கல் செய்தார்.
தொடர்ந்து பெரம்பூரில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். பெரம்பூரில் திமுக அரசை குற்றம்சாட்டிய விஜய் தவெகவுக்கு இந்த தேர்தலில் ஒரே ஒரு முறை வாய்ப்பளிக்க வேண்டும் என்று கூறினார்.. இதை தொடர்ந்து கொளத்தூரில் பிரச்சாரம் செய்ய விஜய் திட்டமிட்டிருந்தார். ஆனால் கொளத்தூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் போலீஸ் அனுமதித்த இடத்திற்கு 100 மீட்டர் முன்பே வாக்கு சேகரித்தார்..
மேலும் அளவுக்கு அதிகமான கூட்டம் கூடியதால் போலீசார் கூறியதை அடுத்து 2 நிமிடங்களில் பேச்சை முடித்துக் கொண்டார். அதனை தொடர்ந்து சென்னை வில்லிவாக்கத்தில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது. கொளத்தூரில் சரியான பாதுகாப்பு கொடுக்காததால் வில்லிவாக்கத்தில் விஜய் பிரச்சாரம் ரத்து செய்யப்படுவதாக தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே நேற்றைய தினம் சென்னை வில்லிவாக்கம் ,அண்ணா நகர் ,டி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விஜய் பரப்புரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் காவல்துறையினர் விதித்த நேரக்கட்டுப்பாடு காரணமாக பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் இன்று விஜய் மேற்கொள்ள இருந்த பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நெருங்கும் வேளையில், தவெக தலைவர் விஜய்யின் பிரசாரங்களுக்குக் காவல்துறை போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும், வேண்டுமென்றே நேரக் கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும் அக்கட்சித் தொண்டர்கள் சமூக வலைதளங்களில் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
: Gold Loan: நகைக் கடன் வாங்கியவர்களுக்கு அதிர்ச்சி தகவல்.. RBI எச்சரிக்கை என்ன சொல்கிறது?

