சினிமா பிளாட்பார்ம் என்ற பட நிறுவனம் சார்பாக V.T. ரித்தீஷ்குமார் தயாரிக்கும் படம் 'நான் அவளை சந்தித்த போது'.
எல்.ஜி. ரவிச்சந்தர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் பார்த்திபன் இயக்கிய 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தில் நாயகனாக நடித்தவர். நாயகியாக சாந்தினி நடிக்கிறார்.
இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
விழாவில் தயாரிப்பாளர் ரித்தீஷ்குமார் பேசுகையில்,
"இன்று என் வாழ்வில் முக்கியமான நாள். சினிமாவிற்காக நல்லகதை தேடிக்கொண்டு இருந்தேன். எல்.ஜி.ரவிச்சந்தர் இக்கதையைச் சொன்னார்.
மனதே உடைந்து போனது. இப்படம் ஒரு உண்மைச் சம்பவம். இந்தப் படத்தை எடுப்பதற்காக நிறைய சிரமப்பட்டு இருக்கிறோம்.
சினிமா என்பதைத் தாண்டி ஒரு குடும்பமாக இப்படத்தில் வேலை செய்துள்ளோம். இதை வெறும் சினிமாவாக பார்க்காமல் என் வாழ்க்கையாக நினைத்து இப்படத்தை எடுத்துள்ளேன். நிறைய பேர் என்னை என்கரேஜ் பண்ணவில்லை, டிஸ்கிரேஜ் தான் செய்தார்கள். இதை எல்லாம் தாண்டி இப்படம் கவிதை போல் இருக்கும். படத்தைப் பார்த்து ஆதரவு தாருங்கள்," என்றார்
நடிகர் சந்தோஷ் பிரதாப் பேசியதாவது,
"எப்போதும் பழைய ஆட்களிடம் வேலை செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு பிடித்தது எல்லாமே சினிமா தான். இப்படத்தின் கதையை நான் கேட்கவே இல்லை. கதை மீது இயக்குநருக்கு பெரிய நம்பிக்கை உள்ளது. பாக்கியராஜ் சாரின் மகனால் தான் எனக்கு 'சந்திரமெளலி' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.
சினிமா பின்னணி இல்லாதவர்களும் நிறையபேர் சாதித்து இருக்கிறார்கள். அது எனக்குப் பெரிய ஊக்கத்தைத் தரும். இங்கு அவ்வளவு சீக்கிரம் யாரையும் நம்பிவிடக்கூடாது என்பதை கற்றுக்கொண்டேன். இந்தப் படத்தோட வாய்ப்பு கொடுத்ததற்கு தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் இருவருக்கும் நன்றி. இந்தப் படத்தில் வொர்க் பண்ண அனைவரும் என்னை நன்றாகப் பார்த்துக்கொண்டார்கள்," என்றார்
இசை அமைப்பாளர் ஹித்தேஷ் முருகவேள் பேசுகையில்,
"எனக்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி. இந்தப் படத்தின் இசையை ரொம்ப குவாலிட்டியாகப் பண்ணச்சொன்னார். 70 ஆர்கஸ்ட்ராவை வைத்து ரிக்கார்ட் பண்ணோம். இதை எல்லா இசை அமைப்பாளர்களும் ஃபாலோ செய்யவேண்டும்," என்றார்
இயக்குநர் எல்.ஜி ரவிசந்தர் பேசியதாவது,
"நானும் படம் டைரக்ஷன் பண்ணிக்கிட்டே இருக்கிறேன். எல்லாரும் சொல்வார்கள் ஒரு படம் பண்ணா பெரிதா ஆயிடலாம் என்பார்கள். இன்னைக்கும் நான் டூவீலர் தான் போறேன். இன்னைக்கு சினிமா மேல் ரொம்ப பயமா இருக்கு. இந்த லைனை தயாரிப்பாளரிடம் சொன்னேன். வாழ்க்கையில் நடந்த இன்சிடெண்டைத்தான் சொன்னேன். உடனே அவர் படத்தை எடு என்றார். எனக்கு அதுவே மிகவும் பயமாக இருந்தது. ஆனால் படத்தை தயாரிப்பாளர் பார்த்துவிட்டு நான் எதிர்பார்த்ததை விட நல்லா எடுத்திக்கிறீர்கள் என்றார். இது எனக்கு ஒரு கோடி வாங்கியதற்கு சமம்.
நான் எல்லா மொழிகளிலும் படம் வொர்க் பண்ணி இருக்கிறேன். ஒரு பெரிய இயக்குநராக வர முடியவில்லை. ஆனால் இந்தப்படம் வெளியான பின் நான் பெரிய இயக்குநரா வருவேன் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் உள்பட அனைவருமே எனக்காக உழைத்தார்கள். தயாரிப்பாளர் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார்," என்றார்
இயக்குநரும் நடிகரும் ஆன கே.பாக்யராஜ் பேசுகையில்,
"இப்படத்தின் இசை அமைப்பாளர் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கிறார். கேமராமேன் செல்வா நல்லா வேலை செய்பவர். ஹீரோ சந்தோஷ் அவரது கஷ்டங்களைச் சொன்னார். அவருக்கும் டெபனட்டா ஒரு ப்ரேக் கிடைக்கும். எல்.ஜி.ரவிச்சந்தர் காமெடி டயலாக் எழுதுகிறவர் என்றார்கள். ஆனால் சீரியஸாக இருந்தார். ஆனால் அவர் பேசியபோது தான் தெரிகிறது அவர் எவ்வளவு காமெடி செய்பவர் என்று.
நான் சினிமாவைப் பார்த்து கண்கலங்கி ரொம்பநாள் ஆகிவிட்டது. இந்தப்படத்தைப் பார்த்த சில பெண்கள் அழுதார்கள் என்று கேள்விப்பட்டேன். அப்படி என்றால் நிச்சயம் இந்தப்படம் அனைவருக்கும் பிடிக்கும். எனக்குத் தெரிஞ்சி இரண்டு பெட்ஷீட் வியாபாரிகளை தயாரிப்பாளர்கள் ஆக்க முயற்சி நடந்த கதை உண்டு. இங்கு ஏமாறுவதற்கான சூழல் நிறைய உண்டு. இப்படத்தின் தயாரிப்பாளர் ரொம்ப நம்பிக்கையாக வந்திருக்கிறார். அவருக்கு ஏற்ற டீமும் அமைந்துள்ளது.
டிஸ்டிரிப்யூட்டரிடம் கதை சொல்வது பெரிய கொடுமை. பாரதிராஜா அப்படி நிறையபேரிடம் கதை சொல்லி சிரமப்படுவதைப் பார்த்திருக்கிறேன். அதனால் நான் எடுக்கும் படத்தில் யாருக்கும் கதை சொல்லமாட்டேன். முந்தானை முடிச்சு படத்தின் கதையைக் கேட்டபின் ஏவி.எம்-ல் இப்படத்திற்கு இளையராஜா தான் இசை அமைக்கணும் என்றார்கள். நான் கங்கை அமரனை பிக்ஸ் பண்ணி இருந்தேன். பின் ஏவி.எம், கங்கை அமரனை சந்தித்து அவருக்கு இரு படங்கள் தருவதாகச் சொல்லி இந்தப்படத்தை இளையராஜாவிற்குக் கொடுத்தார்கள்.
நான் வளர்ந்தது பெயர் வாங்கியது எல்லாமே பெண்களால் தான். எம்.ஜி.ஆர் ஒரு மீட்டிங்கில் பெண்கள் போனபின் ஆண்களிடம் பேச வேண்டும் என்றார். பின் ஆண்களிடம் அவர் சொன்னார், "ரகசியம் ஒன்றுமில்லை. இவ்வளவு பெரிய கூட்டத்தில் ஒன்றாக கலைந்து போகும்போது பெண்கள் அவதிப்படக்கூடாது என்று நினைத்து தான் அவர்களை முதலாவதாக போகச் சொன்னேன்" என்றார். அப்படி யோசிக்கக் கூடிய எம்.ஜி.ஆர் என் படங்களை பார்த்துவிட்டு என்னை கலைவாரிசு என்று சொல்லி இருக்கிறார் என்றால் நான் பெண்களை எப்படி மதித்திருப்பேன் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தப்படத்தைப் பார்த்து சில பெண்கள் அழுததாகச் சொன்னதால் எனக்கும் இப்படத்தை உடனே பார்க்க வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறது" என்றார்.

