தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்த்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், நாச்சியார்கோவில் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, இவர் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்காக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து படித்து வருகிறார்.
இந்நிலையில், கும்பகோணம் அருகே துக்காட்சி கிராமத்தை சாதிக் என்பவரின் மகன் முகமது கையூப் (27). இவர் சிறுமியின் வீட்டிற்கு அருகே உள்ள ஒருவரின் வீட்டில், கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இதனால் சிறுமியை சந்தித்து பேசி வந்துள்ளார். இதையடுத்து, கடந்த ஜூலை 4ம் தேதி அதிகாலை, சிறுமி வீட்டில் துாங்கி கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த சிறுமி திடீரென்று அலறியுள்ளார். இந்த அலறல் சத்தம் கேட்டு, சிறுமியின் தாய் எழுந்து வந்து விசாரித்துள்ளார். அப்போது, முகமது கையூப் வீட்டில் புகுந்து தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறி அழுதுள்ளார். இதனால் சிறுமியின் தாய் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார். இதை பார்த்த முகமது கையூப் அங்கிருந்து தப்பியோடி விட்டார்..
மேலும், முகமது கையூப் சிறுமியிடம் மொபைல் எண்ணை வாங்கிக்கொண்டு, தான் அழைக்கும் போது, பேச வேண்டும் என மிரட்டி வந்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாய் நாச்சியார்கோவில் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி, முகமது கையூப் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை நேற்றுமுன்தினம் போலீசார் கைது செய்தனர்.
கடன் பிரச்சினையால் கூலித் தொழிலாளி தற்கொலை
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே தேசிய நெடுஞ்சாலை பேருந்து நிழற்குடையில் கடன் பிரச்சினையால் கூலித் தொழிலாளி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா மேலச்செம்மங்குடி பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் அமரும் நிழற்குடையில் நேற்று அதிகாலை அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் தூக்கில் பிணமாக இறந்து கிடந்தார். இந்த பேருந்து நிறுத்தம் தஞ்சாவூர்-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது
இதுகுறித்து அப்பகுதி மக்கள் மெலட்டூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடன் சம்பவ இடத்திற்கு மெலட்டூர் போலீசார் விரைந்து வந்து தூக்கில் இறந்து தொங்கிய ஆண் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தூக்கில் பிணமாக தொங்கியவர் அய்யம்பேட்டை திருநகர் பகுதியை சேர்ந்த சோமசுந்தரம் என்பவரின் மகன் ராஜசேகரன் (55) என்பது தெரிய வந்தது. திருமணமான இவருக்கு குழந்தைகள் இல்லை. கூலித் தொழிலாளியான ராஜசேகரன் மதுவுக்கு அடிமையானவர் என்பதும், இதனால் அதிக கடன் வாங்கியுள்ளார் என்பதும் தெரிய வந்தது.
கடன் பிரச்சினை அதிகரித்ததால் நேற்று அதிகாலை வீட்டிலிருந்து வந்தவர் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேலச்செம்மங்குடி பஸ் நிறுத்த பயணிகள் நிழற்குடையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மெலட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Author : என்.நாகராஜன்

