Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
6 மாதத்தைக் கூட தாண்ட மாட்டார்கள்! - புதுச்சேரி அரசுக்கு எதிராக நீதிமன்றம் செல்ல காங்கிரஸ் முடிவு!

6 மாதத்தைக் கூட தாண்ட மாட்டார்கள்! - புதுச்சேரி அரசுக்கு எதிராக நீதிமன்றம் செல்ல காங்கிரஸ் முடிவு!

ABP Nadu 1 week ago

புதுச்சேரியில் ரேஷன் அரிசி விநியோக டெண்டரில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாகவும், தவெக (தமிழக வெற்றிக் கழகம்) கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் பேசி முடிவெடுப்பார் என்றும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நாராயணசாமி கூறியதாவது:

ரேஷன் அரிசி டெண்டரில் ஊழல்:

புதுச்சேரி மக்களுக்கு ரேஷனில் அரிசி வழங்குவதற்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஓராண்டு காலத்திற்கு டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டரை சென்னையில் உள்ள மத்திய அரசு நிறுவனமான ‘கேந்திரிய பண்டார்’ எடுத்தது. கடந்த ஆண்டு ஜூன் முதல் நவம்பர் மாதம் வரை மட்டுமே அரிசி விநியோகம் செய்யப்பட்டது. அதன் பிறகு கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து இதுவரை ரேஷன் அரிசி வரவில்லை.

அரிசி விநியோகம் செய்யாத நிலையிலும், கேந்திரிய பண்டார் நிறுவனத்தின் டெண்டர் இதுவரை ரத்து செய்யப்படவில்லை. இதன் மூலம் ரேஷன் அரிசி டெண்டரில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. இந்த விவகாரத்தில் ஒட்டுமொத்த அரசு மீதும் சந்தேகம் உள்ளது. கூட்டுறவு நிறுவனமான ‘கான்பெட்’ மற்றும் ‘கேந்திரிய பண்டார்’ இடையே நிறைய தொடர்புகள் உள்ளன.

கான்பெட் மேலாண் இயக்குனர் (M.D) ஐயப்பனே, ‘அமுதசுரபி’ நிறுவனத்திற்கும் எம்.டி-யாக உள்ளார். சமீபத்தில் கான்பெட் நிறுவனத்தின் பணம் ரூபாய் 8 கோடி அமுதசுரபிக்கு பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இந்த விதிமுறை மீறிய பணப் பரிமாற்றத்திற்கு அனுமதி தந்தது யார்? அரிசி கொள்முதலில் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதால், துணைநிலை ஆளுநர் இதில் உடனடியாகத் தலையிட்டு முழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

முடங்கிக் கிடக்கும் மக்கள் விரோத ஆட்சி:

புதுச்சேரியில் எப்போது பேரவைத் தலைவர் தேர்தல் நடக்கும், எப்போது அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்படும் என்பது புரியாத புதிராகவே நீடிக்கிறது. இது வன்மையான கண்டனத்திற்குரியது. அனைத்துத் துறைகளும் முடங்கி, மக்கள் விரோத ஆட்சிதான் தற்போது புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. என்.டி.ஏ (NDA) கூட்டணிக்குள் நடக்கும் அதிகாரச் சண்டையால், அவர்களை நம்பி வாக்களித்த மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

அமைச்சரவை மற்றும் இலாகாக்களை ஒதுக்குவதில் உள்ள பிரச்சினையைக் கூட தீர்க்க முடியாமல் மக்களைத் தவிக்க விட்டுள்ள முதலமைச்சரும், அமைச்சர்களும் கூண்டோடு ராஜினாமா செய்ய வேண்டும். புதிதாக அமைந்த இந்த என்.டி.ஏ கூட்டணி ஆட்சியின் செயல்பாடுகளைப் பார்க்க ஆறு மாதமாவது அவகாசம் கொடுக்கலாம் என்று நினைத்தோம். ஆனால், போகிற போக்கைப் பார்த்தால் இந்த ஆட்சியாளர்கள் 6 மாதங்களைக் கூட தாண்ட மாட்டார்கள் போல தெரிகிறது. இந்த அரசுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் விரைவில் தொடர் போராட்டங்களை கையில் எடுக்க உள்ளோம். அரசின் ஊழல்களுக்கு எதிராக நீதிமன்றத்தையும் நாடுவோம்.

தவெக-வுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை:

புதுச்சேரியில் விஜய் தலைமையிலான தவெக (தமிழக வெற்றிக் கழகம்) கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக, எங்களது கட்சிப் பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர், தவெக தலைமையுடன் பேசி முடிவெடுப்பதாகக் கூறியுள்ளார். அவர் பேசி முடித்த பின்பு தான் கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். இந்தப் பேட்டியின் போது இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த் நடராஜன் உடனிருந்தார்.

Author : சிவரஞ்சித்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu