அமெரிக்கா - ஈரான் இடையே மீண்டும் போர் தொடங்கிவிடுமோ என்ற அச்சம் உலக அளவில் நிலவும் சூழலில், அதை மெய்ப்பிக்கும் விதமாக, மெல்ல மெல்ல தாக்குதல்களை அதிகப்படுத்தி வருகிறது அமெரிக்கா.
ஏற்கனவே நேற்று முன்தினம் இரு தரப்பும் மாறி மாறி ஒரு தாக்குதலை நடத்திய நிலையில், நேற்றும் அமெரிக்க ராணுவம், ஹார்முஸ் ஜலசந்தி அருகே, ஈரானின் ராணுவ தளங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.
ஈரான் ராணுவ தளங்களை குறி வைத்து தாக்கிய அமெரிக்கா
அமெரிக்க ராணுவம், ஈரான் மீது மீண்டும் பெரிய தாக்குதல்களை நடத்தியுள்ளது. அமெரிக்க அதிகாரிகளின் தகவல்களின்படி, இந்த இரவு நேரத் தாக்குதல்கள், அமெரிக்க படைகளுக்கும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் வர்த்தகக் கப்பல்களுக்கும் அச்சுறுத்தலாக கருதப்பட்ட ஈரானிய ராணுவத் தளங்களை குறி வைத்து அமெரிக்க ராணுவம் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர், சாத்தியமான அச்சுறுத்தலாக கருதப்பட்ட பல ஈரானிய ஆளில்லா விமானங்களையும் அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தியில் அதிகரித்த பதற்றம்
அமெரிக்காவின் இந்த தாக்குதல் நடவடிக்கை, உலகின் மிக முக்கியமான எண்ணெய் வர்த்தகப் பாதைகளில் ஒன்றாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியை சுற்றியுள்ள செயல்பாடுகளை முடக்கும் செயலாக அமைந்துள்ளது. ஈரானிய ராணுவ நடவடிக்கைகளும், ஆளில்லா விமானங்களின் நடமாட்டமும், அந்த ஜலசந்தி வழியாக செல்லும் வர்த்தகக் கப்பல்களுக்கும், அமெரிக்கப் படைகளுக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்கா கூறுகிறது. அதனாலேயே தற்போது தாக்குதல் நடத்தப்பட்டு, ஹார்முஸ் பகுதியில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் புதிய தாக்குதல்
அமெரிக்கா - ஈரான் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் வேளையில், இந்த புதிய தாக்குதல்கள் நடந்துள்ளன. இதற்கிடையே, சாத்தியமான ஒரு அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஈரானும் ஓமானும் இணைந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து நடவடிக்கைகளை நிர்வகிக்கக்கூடும் என்று ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்தன. இருப்பினும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த கூற்றை நிராகரித்தார். ஹார்முஸ் ஜலசந்தி திறந்தே இருக்கும் என்றும், அதன் வழியாக சர்வதேச போக்குவரத்து தொடரும் என்றும் ட்ரம்ப் தெளிவாகக் கூறியுள்ளார்.
ஏற்கனவே தாக்குதல் நடத்திய அமெரிக்கா
முன்னதாக, திங்களன்று ஈரானுக்கு எதிராக ஒரு எதிர்த்தாக்குதலை அமெரிக்கா நடத்தியது. அதோடு, அது ஒரு "தற்காப்புத் தாக்குதல்" என்று விளக்கமளித்தது. இருப்பினும், ஈரான் இந்த தாக்குதலை, இரு நாடுகளுக்கும் இடையிலான நிலையற்ற போர்நிறுத்த ஒப்பந்தத்தின் மீறல் என்று கூறி கண்டனம் தெரிவித்தது. அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் கதவலின்படி, இந்த தாக்குதல் அமெரிக்கப் படைகளுக்கு அச்சுறுத்தலாக இருந்த படகுகளையும், ஏவுகணை ஏவுதளங்களையும் குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது.
சீராக அதிகரித்து வரும் பதற்றம்
கடந்த 3 மாதங்களாக அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் சீராக அதிகரித்து வருகிறது. கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்க மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீதான தாக்குதல்களை நடத்தியதிலிருந்து இந்த போர் தொடங்கியது. இந்த மோதலில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், உலகளாவிய எரிசக்தி சந்தை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போர் காரணமாக, சர்வதேச எண்ணெய் மற்றும் எரிசக்தி விலைகளில் கடும் உயர்வு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Author : ஸ்ரீராம் ஆராவமுதன்

