தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. சட்டப்பேரவையில் திமுக - தவெக உறுப்பினர்கள் இடையே தினசரி அனல் பறக்கும் விவாதம் நடைபெற்று வருகிறது.
சட்டப்பேரவைக்கு வந்த இன்பநிதி:
இன்று நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை நேரில் காண்பதற்காக உதயநிதியின் மகன் இன்பன் உதயநிதி (அ) இன்பநிதி இன்று நேரில் வந்தார். அவர் சட்டப்பேரவையில் நடக்கும் இந்த பேரவை விவாதத்தை மாடத்தில் அமர்ந்து பார்த்தார். திமுக-வின் அடுத்த தலைவராக இன்பநிதியை பலரும் பேசி வரும் நிலையில், அவர் அரசியலில் இல்லாத சூழலிலே அவர் பல விமர்சனங்களுக்கு ஆளாகி வரும் நிலையில் அவர் இன்று சட்டப்பேரவை நிகழ்வை நேரில் சென்று சந்தித்துள்ளார்.
இன்பநிதி இன்று சட்டப்பேரவை நிகழ்வை நேரில் காண வந்திருப்பது அவர் அரசியலில் நுழைவதற்கான அச்சாரமாகவே கருதப்படுகிறது. ஏனென்றால், கடந்த 2017ம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் அரசியலிலே இல்லாத தருணத்தில் அவர் சட்டப்பேரவைக் கூட்டத்தை நேரில் காண ஒரு சராசரியான நபராக அன்று வந்திருந்தார்.
அன்று உதயநிதி:
சட்டப்பேரவை நிகழ்வை நேரில் பார்த்த பிறகு, திமுக தலைவராக பொறுப்பு வகித்த கருணாநிதியின் மறைவிற்கு பிறகு உதயநிதி தீவிர அரசியலில் ஈடுபட்டார். 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராக பொறுப்பேற்று, பின்னர் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
தற்போது உதயநிதி ஸ்டாலினைப் போலவே சட்டப்பேரவைக் கூட்டத்தை நேரில் பார்க்க வந்துள்ளார் இன்பன் உதயநிதி. தற்போது 20 வயதே ஆன இன்பன் உதயநிதி ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தின் சிஇஓ-வாக கடந்தாண்டு செப்டம்பர் முதல் பொறுப்பு வகித்து வருகிறார்.
அடுத்த தேர்தலுக்கான அச்சாரமா?
இன்பன் உதயநிதியின் செயல்பாடுகள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வரும் சூழலில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் முதலமைச்சர் விஜய்யை விமர்சிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவுகள் இட்டிருந்தார்.
இப்போது, சட்டப்பேரவை நிகழ்வை காண வந்துள்ள இன்பன் உதயநிதி அடுத்த தேர்தலில் திமுக வேட்பாளராக களமறிங்குவாரா? என்ற மிகப்பெரிய கேள்வியும், எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அதற்கான அச்சாரமாகவும், அடித்தளமாகவுமே அவர் இன்று சட்டப்பேரவைக்கு வந்துள்ளதாகவே அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
திமுக-வைப் பொறுத்தமட்டில் தற்போது தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு வகிக்கிறார். இருப்பினும் கொளத்தூரில் அவரது தோல்வி திமுக-வினரை அதிர்ச்சி அடைய வைத்தது. இதனால், தற்போது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பு வகிக்கும் உதயநிதிக்கு கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்கும் வகையில் கூடுதல் அதிகாரம் வழங்கவும் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
ஏன் இந்த அவசரம்?
இந்த நிலையில், உதயநிதிக்கு பக்கபலமாக இன்பநிதியை கட்சியின் உள்ளே கொண்டு வர சில நகர்வுகள் உதயநிதி தரப்பில் இருந்து நகர்த்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. கட்சியில் கனிமொழிக்கு முக்கிய அதிகாரங்கள் வழங்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் குரல் வலுவாக எழுப்பி வரும் சூழலில், இன்பநிதியை உதயநிதி தலைமையை வலுவாக்குவதற்காக உள்ளே கொண்டு வரவும் உதயநிதி தரப்பு காய்நகர்த்துவதாகவும் கூறப்படுகிறது.
Author : சுகுமாறன்

