Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"அதிமுகவிற்கு உண்மையிலேயே அக்கறை இருந்தா இதப் பண்ணட்டும்!" எம்பி சுதா..

"அதிமுகவிற்கு உண்மையிலேயே அக்கறை இருந்தா இதப் பண்ணட்டும்!" எம்பி சுதா..

ABP Nadu 57 mins ago

யிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்திற்கு உட்பட்ட கடலோரக் கிராமங்களான தொடுவாயைச் சேர்ந்த மாவீரன், கீழ்மூவர்கரையைச் சேர்ந்த சங்கர், திருமுல்லைவாசலைச் சேர்ந்த பால்ராஜ் மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் ஆகிய நான்கு மீனவர்களும் வாழ்வாதாரத் தேவைகளுக்காகச் சவூதி அரபியாவிற்குச் சென்று அங்குள்ள மீன்பிடிப் படகுகளில் தங்கி வேலை செய்து வந்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது, ஈரான் நாட்டின் எல்லைப் பகுதியில் கடல் கொள்ளையர்களால் திடீரெனத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், தொடுவாய் கிராமத்தைச் சேர்ந்த மாவீரன் சம்பவ இடத்திலேயே குண்டடிபட்டுப் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த கீழ்மூவர்கரை சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுப் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒரே பகுதியில் சேர்ந்த இரண்டு மீனவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் மயிலாடுதுறை மற்றும் சுற்றியுள்ள கடலோரக் கிராமங்களில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எம்பி நேரில் ஆறுதல்

சவூதி அரபியாவில் குண்டடிபட்டு உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினரை மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா நேரில் சென்று சந்தித்துத் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்தார். உயிரிழந்த மாவீரனின் மனைவி அமுதா மற்றும் குடும்பத்தினரிடம் பேசிய எம்பி சுதா, உயிரிழந்தவர்களின் உடல்களைத் தாய்நாட்டிற்குக் கொண்டு வருவதற்கான அனைத்து சட்டப்பூர்வ மற்றும் தூதரக நடவடிக்கைகளும் தீவிரமாகத் தொடரப்பட்டு வருவதாகவும், குடும்பத்தினர் தைரியமாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தரத் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு அவசரக் கடிதம்

பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுதா, இந்த விவகாரத்தில் தாங்கள் எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகள் குறித்து விரிவாகப் பேசினார். மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு உயிரிழப்பு ஏற்பட்ட செய்தி அறிந்தவுடனேயே, உயிரிழந்தவர்களின் உடல்களை உடனடியாக இந்தியாவிற்கு மீட்டுக்கொண்டு வர வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும், சவூதி அரேபியாவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கும் அவசரக் கடிதம் அனுப்பியதாகக் குறிப்பிட்டார். தமிழ்நாடு அரசிடமும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சகம் மூலமாகத் தொடர் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன என்றும் தெளிவுபடுத்தினார்.

தூதரகத்தின் பதில் மற்றும் தற்போதைய நிலை

இந்தியத் தூதரக அதிகாரிகள் அளித்த அதிகாரப்பூர்வ பதிலைப் பகிர்ந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், சவூதி அரேபியா நாட்டில் தற்போது இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவலத்துறை விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். அந்நாட்டுச் சட்ட விதிமுறைகளின்படி காவல்துறை விசாரணை அறிக்கை தயார் செய்யப்பட்டவுடன், எந்தவித தாமதமுமின்றி உடல்களைத் தாய்நாட்டிற்கு அனுப்பி வைப்பதாகத் தூதரக அதிகாரிகள் உறுதியளித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மற்றொரு மீனவரான சங்கரின் உடலையும் விரைவாகப் பெற்றுத் தர வேண்டும் என்று தூதரக அதிகாரிகளிடம் கூடுதல் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

காணாமல் போன மீனவர் மீட்பு மற்றும் எடப்பாடி பழனிசாமிக்குக் கேள்வி

இதேபோன்று துபாயில் மாயமாகி நீண்ட நாட்களாகக் காணாமல் போயிருந்த மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர், வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் தீவிர முயற்சியால் பத்திரமாக மீட்கப்பட்டுத் தற்போது மயிலாடுதுறைக்கு வந்து சேர்ந்துள்ளதை நினைவுகூர்ந்த எம்பி சுதா, மத்திய அரசு மீனவர்களின் கடினமான வாழ்வாதார சூழ்நிலையையும் குடும்பங்களின் தற்போதைய நிலையையும் கருத்தில் கொண்டு உடல்களை மீட்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

அதேவேளையில், இத்தகைய உணர்வுப்பூர்வமான சோக நிகழ்வை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசியலாக்க முயல்வதாகக் குற்றம்சாட்டினார். மத்தியில் ஆளும் பாஜக அரசுடன் நெருங்கிய கூட்டணியில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி, வெற்று அரசியல் அறிக்கைகளை வெளியிடுவதை விடுத்து, மத்திய அரசை நேரடியாகத் தொடர்புகொண்டு உடல்களை விரைவாக மீட்டு வர நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். அதிமுகவிற்கு உண்மையிலேயே மீனவர்கள் நலனில் அக்கறை இருக்குமானால், மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டு உடல்களை உடனடியாக தாய்நாட்டிற்கு கொண்டுவர அவர்கள் உதவ வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுதா கேட்டுக்கொண்டார்.

Author : எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu