தஞ்சாவூர்: திருச்சிராப்பள்ளி மாநகரத்தின் பல்வேறு முக்கியச் சாலைச் சந்திப்புகளில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள் நீண்ட நாட்களாக செயலிழந்து பழுதடைந்து கிடப்பதால், நகரம் முழுவதும் போக்குவரத்து குழப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக நகரின் முக்கியச் சந்திப்புகளில் தினசரி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சிக்னல்கள் செயல்படாததால், வாகன ஓட்டிகள் தங்களது வசதிக்கேற்ப வாகனங்களை இயக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் போக்குவரத்து ஒழுங்கு சீர்குலைவதுடன், சிறு விபத்துகள் மற்றும் பெரும் விபத்துகள் ஏற்படுவதற்கான அபாயமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
நகரின் போக்குவரத்து மிகுந்த முக்கியச் சந்திப்புகளான மத்திய பேருந்து நிலைய சந்திப்பு, சத்திரம் பேருந்து நிலையம், பாலக்கரை, தில்லை நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த பிரச்சினை தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது.
நகரின் மிகவும் பரபரப்பான பகுதியாகக் கருதப்படும் மத்திய பேருந்து நிலைய சந்திப்பில், வெளியூர் பேருந்துகள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், இருசக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்டவை ஒரே நேரத்தில் சந்திப்பிற்குள் நுழைவதால் நீண்ட நேர போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பொதுமக்களும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
அதேபோல், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிகளவில் பயன்படுத்தும் சத்திரம் பேருந்து நிலையப் பகுதியில், சிக்னல்கள் செயலிழந்துள்ளதால் பாதசாரிகள் சாலையைக் கடப்பதில் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக முதியவர்கள், பெண்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் நீண்ட நேரம் சாலையின் ஓரத்தில் அச்சத்துடன் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
பாலக்கரை மற்றும் தில்லை நகர் பகுதிகளில், வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் அதிகமாக உள்ளதால், சிக்னல் செயலிழப்பால் வாகனங்கள் வரிசையாக தேங்கி நின்று நெரிசலை அதிகரிக்கின்றன.
சிக்னல்கள் வேலை செய்யாத காரணத்தால், எந்த வாகனம் முதலில் செல்ல வேண்டும் என்ற போட்டி ஓட்டுநர்களிடையே நிலவுகிறது. நான்கு திசைகளிலிருந்தும் ஒரே நேரத்தில் வாகனங்கள் சந்திப்பிற்குள் நுழைவதால், ஒட்டுமொத்த போக்குவரத்தும் ஸ்தம்பிக்கும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் நெரிசலைத் தவிர்க்க முந்திச் செல்ல முயற்சிப்பதால் சிறு விபத்துகள் தினசரி நிகழ்வாக மாறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
சிக்னல்கள் செயலிழக்கும் பகுதிகளில் போக்குவரத்து காவலர்கள் நேரடியாக பணியமர்த்தப்பட வேண்டும் என்றாலும், பல இடங்களில் போதிய காவலர்கள் இல்லாத நிலை காணப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில இடங்களில் ஒரே ஒரு காவலர் மட்டுமே நெரிசலை கட்டுப்படுத்தப் போராடி வருவதாகவும், சில சந்திப்புகளில் காவலர்கள் இல்லாததால் நிலைமை மேலும் மோசமடைந்து வருவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் நுகர்வோர் அமைப்பினர் கூறுகையில், “நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள சிக்னல்களுக்கு முறையான பராமரிப்பு மேற்கொள்ளப்படாததே இந்த நிலைக்கு காரணம். பழுதடைந்த சிக்னல்களை உடனடியாகச் சீரமைப்பதுடன், மின்சாரத் தடைகளை சமாளிக்கும் வகையில் சூரியசக்தி மூலம் இயங்கும் சிக்னல்களையும் அமைக்க வேண்டும்” அதிக நெரிசல் காணப்படும் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் போக்குவரத்து காவலர்களை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மிக வேகமாக வளர்ந்து வரும் திருச்சி மாநகரத்தில் அடிப்படை போக்குவரத்து கட்டமைப்பே பாதிக்கப்பட்டிருப்பது நகரின் வளர்ச்சிக்கு பெரும் கேள்விக்குறியாக எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, செயலிழந்த சிக்னல்களை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்பதே திருச்சி மக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.
Author : என்.நாகராஜன்

