தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்வி பயிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, வளாகத்தில் உள்ள கழிப்பறைகளின் சுகாதாரச் சீர்கேட்டை சரி செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வரும் பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கழிப்பறைகள் மிகுந்த சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகின்றன. போதிய பராமரிப்பு இன்றி நீண்ட நாட்களாகச் சுத்தம் செய்யப்படாமல் இருக்கும் இந்த கழிப்பறைகளால், குறிப்பாக மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சுகாதாரமற்ற கழிப்பறைகளைப் பயன்படுத்துவதால் மாணவிகளுக்குத் தொற்றுநோய்கள் மற்றும் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு வருவது மிகுந்த கவலையளிக்கிறது.

இந்த அவல நிலைக்கு முக்கியக் காரணமாக, கல்லூரியில் கழிப்பறைகளைத் தூய்மைப்படுத்தத் தேவையான போதிய தூய்மைப் பணியாளர்கள் பணியில் இல்லாததும், அடிப்படைத் தூய்மைப் பணிகளுக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் கிருமிநாசினிகள் பற்றாக்குறையாக இருப்பதுமே எனக் கூறப்படுகிறது.
கல்வி கற்கும் இடத்தில் மாணவர்களின் ஆரோக்கியமே மிக முக்கியமானதாகும். ஆனால், அடிப்படை சுகாதார வசதிகள் கூட இல்லாத சூழலில் மாணவிகள் கல்வி பயில வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, மாணவ, மாணவிகளின் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான கல்விச் சூழலை உறுதி செய்ய, கல்லூரி நிர்வாகம் மற்றும் தொடர்புடைய உயர் அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, போதுமான எண்ணிக்கையில் தூய்மைப் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
மேலும், கழிப்பறைகளைத் தூய்மைப்படுத்தத் தேவையான அனைத்து உபகரணங்களையும் உடனடியாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். தினசரி அடிப்படையில் கழிப்பறைகளைத் தூய்மைப்படுத்தி, கிருமிநாசினிகளைப் பயன்படுத்தி அவற்றைச் சுகாதாரமாகப் பராமரிக்கத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்" என்று பெற்றோர்கள் வலியுறுத்துகின்றனர்.
மாணவ, மாணவிகளின் உடல்நலனைக் காக்கவும், கல்விச் சூழலை மேம்படுத்தவும் இந்த விவகாரத்தில் உடனடி கவனம் செலுத்தித் தீர்வு காண்பது தற்போது அவசரமும், அவசியமும் ஆகும்.
Author : என்.நாகராஜன்

