ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சுபாஷ் இயக்கியுள்ள படம் ப்ளாஸ்ட். ஆக்ஷன் கிங் அர்ஜூன் , அபிராமி மற்றும் ப்ரித்தி முகுந்தன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
முழுக்க முழுக்க குடும்ப ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள ப்ளாஸ்ட் திரைப்படத்தின் விமர்சனத்தைப் பார்க்கலாம்
ப்ளாஸ்ட் படத்தின் கதை
கராத்தே மாஸ்டரான அர்ஜூன் தனது மகளுக்கு சிறு வயதில் இருந்தே கராத்தே பயிற்சி வழங்கி அவரை தைரியமான ஒரு பெண்ணாக வளர்க்கிறார். அர்ஜூனின் மனைவியான அபிராமியும் கராத்தே தெரிந்தவர். தனது அப்பாவின் அறிவுரையால் யாருக்கு உதவி தேவைப்பட்டாலும் அதை தட்டிக்கேட்கும் பெண்ணாக வளர்கிறார் ப்ரித்தி முகுந்தன். மறுபக்கம் பெரும் முதலாளியான ஜான் கொக்கென் ஒரு மலையை குடைந்து 7000 கோடி மதிப்புள்ள அரிய வகை கனிமத்தை கொள்ளை அடிக்க திட்டமிடுகிறார். இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்க அமைச்சருக்கு 1000 கோடி ரூபாயை கைமாற்றுகிறார். இந்த பணத்தை கைமாற்றும் அர்ஜூன் சிதம்பரம் எதிர்பாராத விதமாக போலீஸில் சிக்கிவிடுகிறார். அர்ஜூன் மற்றும் அவரது குடும்பம் இந்த பிரச்சனைக்குள் எப்படி சிக்குகிறது . அடுத்தடுத்து வரும் வில்லன்களை அதிரடியாக அவர்கள் எதிர்கொள்வதே ப்ளாஸ்ட் படத்தின் கதை
பணத்தாசை பிடித்த ஒரு கொடூரமான வில்லன். அவனுக்கு உதவும் மற்ற வில்லன்கள் என ப்ளாஸ் படத்தின் கதை வழக்கமான த்ரில்லர் படங்களைப் போல் ஒரு கதைதான். ஆனால் மற்ற படங்களில் வருவது போல் ஒரு சிங்கிள் ஹீரோவாக இல்லாமல் இந்த படத்தில் அர்ஜூன் , அபிராமி , ப்ரீத்தி முகுந்தன் என மூவரும் ஹீரோவாக நடித்துள்ளார்கள். ஆக்ஷன் காட்சிகளில் அர்ஜூன் அதே துடிப்புடன் காணப்படுகிறார். மறுபக்கம் அபிராமி மற்றும் ப்ரீத்தி முகுந்தன் கடும் பயிற்சியால் இபப்டத்தில் வரும் ஆக்ஷன் காட்சிகளை நம்பத் தகுந்த முறையில் நடித்துள்ளார்கள்.
ரவி பஸ்ரூர் இசை படம் முழுக்க விறுவிறுப்பை குறையாமல் வைத்திருக்கிறது. ஜான் கொக்கென் , பவன் ,அர்ஜூன் சிதம்பரம் என படத்தில் வில்லனாக பல நடிகர்கள் நடித்துள்ளார்கள் என்றாலும் எந்த வித தனித்தன்மையும் இல்லாமல் அனைவரும் ஒரே மாதிரியான வில்லன்களாகவே எழுதப்பட்டிருக்கிறார்கள். போலீஸாக வரும் திலீபன் நடிப்பு சிறப்பு. எல்லாரையும் விட அதிகப்படியான உழைப்பை கொடுத்திருப்பவர் சண்டை பயிற்சியாளர் ஃபீனிக்ஸ் பாபு. ஒவ்வொரு சண்டைக் காட்சியையும் தத்ரூபமாக வடிவமைத்திருக்கிறார்
அடுத்தடுத்து என கதை விறுவிறுப்பாக சென்றாலும் மிகக் கொடூரமான வில்லன்களிடம் ஒரு குடும்பம் சிக்கியிருக்கிறதே என்கிற பதற்றம் சுத்தமாக இல்லை. வில்லன்களை விட கொடூரமாக அந்த குடும்பம் இருந்ததால் இருக்கலாம். அடுத்தடுத்து சண்டைக் காட்சிகல் வருவதால் ஒரு கட்டத்திற்கு மேல் படத்துடன் ஒட்டுதல் இல்லாமல் வெறும் ஆக்ஷன் அனுபவத்திற்காக மட்டுமே படம் பார்க்கும் நிர்பந்தத்திற்கு ஆளாகிறோம். இயக்குநர் டிராவாவில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் .
Author : ராகேஷ் தாரா

