Dailyhunt
Cheran Pandiyan: தேர்தல் வெற்றி..  நிம்மதி கொடுத்த விஜய்க்கு நன்றி.. மனம் மாறிய சேரன்!

Cheran Pandiyan: தேர்தல் வெற்றி.. நிம்மதி கொடுத்த விஜய்க்கு நன்றி.. மனம் மாறிய சேரன்!

ABP Nadu 3 days ago

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பெருவாரியான வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு நடிகர் சேரன் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அந்த கட்சி 108 தொகுதிகளில் தனது வெற்றியை நிலைநாட்டியுள்ளது. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதனிடையே சட்டமன்றத்தில் தவெக பெரும்பான்மையை நிரூபிக்க 10 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு தேவை என்ற சூழலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகள் வென்ற காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. பிறகட்சிகளின் ஆதரவுடன் விஜய் நாளை முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

விஜயை கடுமையாக விமர்சித்த சேரன்

இந்த நிலையில் தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர்களில் ஒருவரான சேரன், சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மிகப்பெரிய அளவில் ஆதரவு தெரிவித்தார். அதேசமயம் சினிமாவில் உச்ச நடிகராக இருந்த விஜய் அரசியல் களம் கண்டு தேர்தலை சந்தித்ததற்கு கடுமையான ஆட்சேபனை தெரிவித்தார். தனது சமூக வலைத்தளப்பதிவில் தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வந்தார். அதற்கு தவெக தொண்டர்களும் கடுமையான கண்டனம் தெரிவித்தனர்.

ஒரு பதிவில் கூட, “ஏன் தம்பிகளா விஜய் சைக்கிள் நல்லா ஓட்டுறார்னு ஓட்டு போட நாங்க என்னடா தம்பிகளா சைக்கிள்ல பால் யாவாரம் பன்ற கடையா வச்சிருக்கோம்... இல்ல பேரணினா மக்கள் முன்னால 1000 தொண்டர்களோட ஓட்டுங்க... அது ஒரு ஓட்டு கேட்கும் யுத்தின்னு எடுத்துக்குறோம்... ரோட்டுல சர்கஸ் காட்டுறிங்க... மக்கள் என்னடான்னு யோசிப்பாங்கன்னு சிந்திக்க மாட்டிகளா” என்று கூட கேள்வியெழுப்பியிருந்தார். இந்த நிலையில் இந்த தேர்தல் சேரன் ஆதரித்த நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதேசமயம் திமுக, அதிமுக இல்லாத தவெக ஆட்சிக்கு வந்துள்ளதை அவர் வரவேற்றுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சந்தித்த முதல் தேர்தலிலேயே மக்களிம் பெரும் ஆதரவை பெற்று 108 தொகுதிகளில் வென்றிருக்கும் விஜய்யை திரையுலகை சார்ந்தவன் என்ற முறையில் மனமுவந்து வாழ்த்துகிறேன்.. உங்கள் வெற்றியில் எனது மகிழ்ச்சி என்பதே தமிழ்நாட்டில் வீசும் சுதந்திரக்காற்றுதான்... எந்த கட்சிகளின் பிடியில் சிக்கி இத்தனை வருடம் தவித்தோமோ அந்த பிடியில் இருந்து விலக்கி என்னையும் மக்களையும் இளைப்பாற வைத்தமைக்கு நன்றி.. அதுவே எங்கள் நோக்கமுமாக இருந்தது என்பதே உண்மை. மக்களின் விருப்பத்தை நிறைவேற்றி வருங்கால தலைமுறைக்கான அவசியங்களை உங்கள் ஆட்சி உருவாக்கித்தரும் என நம்புகிறேன்.. தேர்தலுக்கு முன் உங்கள் மீது வைத்த விமர்சனங்களுக்காக வருந்துகிறேன்” என தெரிவித்துள்ளார். அவரின் மன மாற்றத்தை தவெக தொண்டர்கள் வரவேற்றுள்ளனர்.

Author : பேச்சி ஆவுடையப்பன்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu