Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Iran Warns US: 'நசுக்கும் பதிலடி' கொடுப்போம்.! அமெரிக்காவிற்கு ஈரான் வார்னிங்.! மீண்டும் வெடிக்கும் போர்.!?

Iran Warns US: 'நசுக்கும் பதிலடி' கொடுப்போம்.! அமெரிக்காவிற்கு ஈரான் வார்னிங்.! மீண்டும் வெடிக்கும் போர்.!?

ABP Nadu 1 week ago

ரான் மீது இன்று அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது ஈரான்.

தனது தேசிய பாதுகாப்பை காக்க "தீர்க்கமான நடவடிக்கைகள்" எடுக்கப்படும் என உறுதியாக தெரிவித்துள்ள ஈரான், இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) வாஷிங்டன் மீறிவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

பிப்ரவரி 28 தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு நடைபெற்றுவரும் நிலையில், ​​தெற்கு ஈரானில் அமெரிக்கா தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

சமீபத்திய ராணுவ நடவடிக்கை, டெஹ்ரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் பல மீறல்களுக்கு சமம் என்று ஈரான் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், தொடர்ச்சியான தாக்குதல்கள் பின்விளைவுகளை சந்திக்கும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.

இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறியதாக குற்றம் சட்டும் ஈரான்

ஈரானின் உயர்மட்டப் பேச்சுவார்த்தையாளரான முகமது பாகர் காலிபாஃப், இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், அமெரிக்கா பல "பெரும் மீறல்களில்" ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார்.

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானிய ஏற்பாடுகளை வாஷிங்டன் மீறியதாகவும், மேலும் ராணுவத் தாக்குதல்கள் நடத்துவதாக தொடர்ந்து அச்சுறுத்தியதாகவும், எண்ணெய் மீதான தடைகளை மீண்டும் அமல்படுத்தியதாகவும், தெற்கு ஈரானில் தாக்குதல்களை நடத்தியதாகவும், லெபனானில் தொடரும் "சியோனிச ஆக்கிரமிப்பு" என்று அவர் விவரித்ததை ஆதரித்ததாகவும் காலிபாஃப் குற்றம் சாட்டினார்.

மேலும், "அச்சுறுத்தல் மற்றும் பணம் பறித்தல் சகாப்தம் முடிந்துவிட்டது. அது எதற்கும் வழிவகுக்காது. நாங்கள் மண்டியிட மாட்டோம்," என்று ஒரு சவால்விடும் செய்தியையும் அவர் வெளியிட்டார்.

பின்விளைவுகள் குறித்து வெளியுறவுத் துணை அமைச்சர் எச்சரிக்கை

ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரிபாபாடியும், அமெரிக்காவின் சமீபத்திய நடவடிக்கைகளை கண்டித்ததோடு, ஈரானிய எண்ணெய் ஏற்றுமதி மீதான விலக்கை ரத்து செய்ததற்கும், புதிய தாக்குதல்களை தொடங்கியதற்கும், வாஷிங்டனை விமர்சித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் 1, 2 மற்றும் 10 ஆகிய சரத்துகளை அமெரிக்கா "அப்பட்டமாக மீறியுள்ளது" என்று கூறினார். மேலும், லெபனானில் உள்ள "சியோனிச ஆட்சி" என்று அவர் குறிப்பிட்ட அமைப்பின் நடவடிக்கைகள் மற்றும் ஈரானுக்கு எதிரான தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் காரணமாக, வாஷிங்டன் இந்த ஒப்பந்தத்தை மீண்டும் மீண்டும் மீறியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

"ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள அதேவேளையில், தனது தேசிய நலன்களையும் பாதுகாப்பையும் காக்க ஈரான் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கும்," என்றும் அவர் கூறியுள்ளார்.

'நசுக்கும் பதிலடி' கொடுக்கப்படும் என ஈரான் ராணுவம் உறுதி

ஈரானின் கதம்-அல்-அன்பியா மத்திய தலைமையகம், சமீபத்திய அமெரிக்கத் தாக்குதல்களை "அப்பட்டமான ஆக்கிரமிப்பு செயல்" எனக் கூறி, அவற்றை வன்மையாக கண்டித்தது. ராணுவத்தின் கூற்றுப்படி, ஈராக்கில், ஈரான் முன்னாள் உச்ச தலைவரின் இறுதி ஊர்வலம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்த தாக்குதல்கள் நிகழ்ந்தன. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஆயுதப் படைகள் ஒரு "நொறுக்கும் பதிலடியை" கொடுக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மதிக்க வாஷிங்டன் தவறிவிட்டதாக ராணுவம் குற்றம் சாட்டியதுடன், ஹார்முஸ் ஜலசந்தியின் நிர்வாகத்தில் வெளித் தலையீட்டை ஈரான் பொறுத்துக்கொள்ளாது என்றும் அறிவித்தது. அந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப்பாதை வழியாக வர்த்தகக் கப்பல்கள் மற்றும் எண்ணெய் டேங்கர்கள் செல்வதற்கான ஒரே பாதுகாப்பான வழி, ஈரான் இஸ்லாமியக் குடியரசால் நியமிக்கப்பட்ட பாதைதான் என்றும் அது கூறியுள்ளது.

Author : ஸ்ரீராம் ஆராவமுதன்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu