மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா - கள்ளழகரை வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து கள்ளழகரை குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வு வெகுவிமர்சையாக நடைபெற்றது - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.
சித்திரைத் திருவிழா 2026
மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை நோக்கிவந்த கள்ளழகர் இன்று காலை வைகையாற்றில் தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி லட்சக்கணக்கான பக்தர்கள். புடை சூழ வைகையாற்றில் எழுந்தருளினார். இதனையடுத்து ஆழ்வார்புரம் மற்றும் வைகை வடகரை ஆகிய பகுதியில் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளினார். இதை தொடர்ந்து மதிச்சயம் பகுதியில் உள்ள ராமராயர் மண்டபத்தில் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் மீது அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்திகடனாக தோப்பரை பைகளை பயன்படுத்தி தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.
ஆரவாரத்துடன் உற்சாகமாக தீர்த்தவாரி
முன்னதாக கள்ளழகர் முன்பாக வரும் கள்ளழகர் கோவில் மற்றும் விசிறிகளுக்கு பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து உற்சாகமாக வரவேற்றனர. தீர்த்தவாரியின்போது கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி கோஷத்துடன் தண்ணீரை பீய்ச்சி அடித்து ஆடிபாடி ஆரவாரத்துடன் உற்சாகமாக தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற்றது.
பாரம்பரிய முறைப்படி ஆட்டுத்தோல் தோப்பரையை பயன்படுத்தியவருக்கு மட்டுமே அனுமதி
முன்னதாக பிரஷர் பம்புகளை பயன்படுத்தி சுவாமி மீது தண்ணீர் பீய்ச்சுவதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் மதிச்சியம் ராமராயர் மண்டபத்திற்கு பிரஷர் பம்புகளுடன் வந்த பக்தர்கள் வெளியேற்றப்பட்டனர். பாரம்பரிய முறைப்படி ஆட்டுத்தோல் தோப்பரையை பயன்படுத்தியவர் மட்டுமே தண்ணீரை பீய்ச்சி அடித்து தீர்த்தவாரி செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டனர்.
Author : அருண் சின்னதுரை

