Dailyhunt
காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!

காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!

ABP Nadu 2 weeks ago

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், அந்த நகரில் 'சொர்க்கவாசல்' எனப்படும் பரமபதவாசல் கொண்ட ஒரே திருத்தலமுமான ஸ்ரீ புஷ்பவல்லி தாயார் சமேத அஷ்டபுஜ பெருமாள் கோவிலில், இந்த ஆண்டிற்கான சித்திரை மாத பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் மிக விமரிசையாகத் தொடங்கியது.

பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவையொட்டி, இன்று அதிகாலை கோவில் கொடிமரத்திற்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பின்னர், கருடாழ்வார் உருவம் பொறிக்கப்பட்ட கொடியானது வேதமந்திரங்கள் முழங்க ஏற்றப்பட்டு, மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.

வெங்கடாத்திரி கொண்டை அலங்காரத்தில் வீதியுலா

கொடியேற்றத்தைத் தொடர்ந்து, கோவில் அலங்கார மண்டபத்தில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியருடன் உற்சவர் ஆதிகேசவப் பெருமாள் எழுந்தருளினார். அப்போது சுவாமிக்கு வெங்கடாத்திரி கொண்டை அலங்காரம் செய்யப்பட்டு, மங்கள வாத்தியங்கள் முழங்க மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முதல் நாளான இன்று மாலை, பெருமாள் கம்பீரமான சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா சென்றார். வரும் பத்து நாட்களும் காலை மற்றும் மாலை ஆகிய இருவேளைகளிலும் அன்ன வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறவுள்ளது.

முக்கிய நிகழ்வுகள்: கருட சேவை மற்றும் தேரோட்டம்

இந்த பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கருட சேவை உற்சவம் வரும் மே மாதம் 3-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நடைபெற உள்ளது. அன்று இரவு சுவாமி ஹனுமந்த வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். விழாவின் மற்றொரு சிறப்பம்சமான திருத்தேர் உற்சவம் (தேரோட்டம்) மே மாதம் 7-ம் தேதி காலை மிக விமரிசையாக நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

விழா ஏற்பாடுகள்

இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்தோஷ்குமார், கோவில் செயல் அலுவலர், தீர்த்தகாரர்கள் மற்றும் உபயதாரர்கள் ஒருங்கிணைந்து சிறப்பான முறையில் செய்துள்ளனர். விழாவையொட்டி கோவிலில் மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளதுடன், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. பத்து நாட்களும் களைகட்டப்போகும் இந்த விழாவால் காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவில் பகுதி தற்போது ஆன்மீக மணம் கமழ்ந்து காணப்படுகிறது.

Author : கிஷோர்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu