கர்நாடகாவில், முதலமைச்சர் பதவி குறித்து நிலவி வந்த சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்துள்ளது. சித்தராமையா இன்று முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் பிற்பகல் 3 மணிக்கு ஆளுநர் அலுவலகத்தில் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அரசியலில் நுழைந்து பதவி விலகுமாறு காங்கிரஸ் மேலிடம் தன்னிடம் கேட்டுக்கொண்டதாகவும், அதனால்தான் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாகவும் சித்தராமையா தனது அமைச்சர்களிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலமைச்சர் இல்லத்தில் காலை உணவு சந்திப்பு - சித்தராமையா காலில் விழுந்த டி.கே. சிவகுமார்
இன்று காலை, பெங்களூருவில் உள்ள முதலமைச்சர் சித்தராமையாவின் இல்லத்தில் நடைபெற்ற காலை உணவு சந்திப்பின்போது, சித்தராமையாவும், டி.கே. சிவகுமாரும் ஒருவரையொருவர் கட்டித் தழுவினர். அதைத் தொடர்ந்து, துணை முதலமைச்சரான டி.கே. சிவகுமார், முதலமைச்சர் சித்தராமையாவின் கால்களை தொட்டு வணங்கினார். முதலமைச்சர் இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பல மூத்த காங்கிரஸ் தலைவர்களும், அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.
சித்தராமையா இன்று பிற்பகலில் தனது ராஜினாமாவை முறைப்படி சமர்ப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த காலை உணவு சந்திப்பு நடைபெற்றுள்ளது. கிடைத்த தகவல்களின்படி, முதலமைச்சர் தனது ராஜினாமா கடிதத்தை வழங்குவதற்காக பிற்பகல் 3 மணியளவில் ஆளுநர் அலுவலகத்திற்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவை மாற்றத்திற்கு முன்னதாக, அமைச்சர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக அமைச்சர் ஜி. பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.
"முதலமைச்சர் அனைத்து அமைச்சர்களையும் காலை உணவிற்கு அழைத்துள்ளார். மேலும், அவர் பதவி விலகுவதற்கு முன்பு, அவர்களின் ஆதரவிற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறார்," என்று பரமேஸ்வரா ஏ.என்.ஐ-யிடம் அவர் தெரிவித்தார்.
தகவல்களின்படி, சித்தராமையா நேற்று ஆளுநரைச் சந்திக்க நேரம் கோரியிருந்தார். இதற்கு பதிலளித்த ஆளுநர், வியாழக்கிழமை காலை 11:30 மணிக்கோ அல்லது பிற்பகல் 3 மணிக்குப் பிறகோ அவரைச் சந்திக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
விஜய்! ராகுலை சந்திக்கும் ப்ளான் CANCEL" src="https://www.youtube.com/embed/33xtkfd0FbE" width="756" height="425" frameborder="0" allowfullscreen="allowfullscreen">
ஆளுநர் சொந்த ஊருக்கு சென்றதால் நிலவும் குழப்பம்
இதற்கிடையே, ஆளுநர் கெலாட் தற்போது மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள தனது சொந்த ஊரில் இருப்பதாக லோக்பவன் அதிகாரிகள் தெரிவித்தனர். முதலமைச்சர் ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டாரா என்று கேட்டபோது, லோக்பவனின் உயர் அதிகாரி ஒருவர், "ஆளுநர் இங்கு இல்லை. இது குறித்து எந்தத் தகவலும் இல்லை. அதுபோன்ற எந்தச் செய்தியோ தகவலோ இதுவரை வரவில்லை," என்று கூறினார்.
மேலும், ஆளுநர் திரும்பி வந்த பிறகே முதலமைச்சர் சித்தராமையா அவரை சந்திக்க முடியும். எனினும், முதலமைச்சர் தனது ராஜினாமாவை லோக்பவன் செயலாளரிடம் சமர்ப்பிக்க முடியுமா என்று அதிகாரியிடம் கேட்டபோது, சித்தராமையா விரும்பினால் அவ்வாறு செய்யலாம் என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Author : ஸ்ரீராம் ஆராவமுதன்

