பிரதமர் வேட்பாளர் யார்.?
தமிழக சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஆதரவு மூலம் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ளார்.
இந்த நிலையில் இந்தியாவின் அடுத்த பிரதமர் விஜய் என்கிற வகையில் வட மாநிலங்களில் சமூக வலைதளங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தவெக அமைச்சர்களும் இந்திய பிரதமர் விஜய் என்கிற வகையில் தொடர்ந்து பேசி வருகிறார்கள். இந்த பரபரப்பான நிலையில், இந்தியா டுடே எடுத்த கருத்து கணிப்பில் பிரதமராக விஜய்க்கு 3வது இடம் அளித்துள்ளது. இது தவெக- காங்கிரஸ் இடையே மோதலை அதிகரிக்க செய்துள்ளது. அமைச்சராக உள்ள ராஜேஸ் கூறுகையில், பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை தவெக ஏற்கவில்லையென்றால் அமைச்சரவையில் இருந்து விலக தயார் என பேசியிருந்தார்.
மோதிக்கொள்ளும் தவெக- காங்கிரஸ்
இந்த பரபரப்புக்கு மத்தியில் இது தொடர்பாக காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் சமூக வலைதளத்தில் நரியின் போலி கருத்துக்கணிப்பு என்ற தலைப்பில் குட்டிக்கதை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஒரு காட்டில் சிங்கமும் யானையும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். காட்டில் எந்தப் பெரிய முடிவாக இருந்தாலும், இருவரும் ஒன்றாக ஆலோசனை செய்வார்கள்.
ஒருநாள், அந்த நட்பைப் பார்த்து பொறாமைப்பட்ட நரி, ஒரு “கருத்துக்கணிப்பு” நடத்துவதாக அறிவித்தது. அது காட்டில் சில விலங்குகளிடம் மட்டும் ரகசியமாகக் கேள்வி கேட்டுவிட்டு, மறுநாள் பெரிய அறிவிப்பை வெளியிட்டது: “கருத்துக்கணிப்பின்படி, காட்டில் யானைக்கு ஆதரவு இல்லை. சிங்கத்தின் மீது விலங்குகளுக்கு அதிக நம்பிக்கை உள்ளது.”
குட்டிக்கதை சொன்ன மாணிக்கம் தாகூர்
சிங்கம் அதை நம்பவில்லை. ஆனால் நரி தொடர்ந்து சொன்னது: “நான் எதையும் சொல்லவில்லை. இது விலங்குகளின் கருத்து. எண்கள்தான் பேசுகின்றன!” அதே நேரத்தில், நரி யானையிடம் சென்று, “இந்த சர்வேயைப் பார்த்தீர்களா? சிங்கம் உங்களைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை மறைக்கிறது. உங்கள் நட்பு இனி அவருக்கு தேவையில்லை” என்றது.
யானைக்கும் - சிங்கத்திற்கும் மோதல்
யானையின் மனதில் சந்தேகம் வந்தது. சிங்கத்திற்கும் யானையின் மீது சந்தேகம் வந்தது. சில நாட்களில் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திப்பதையே குறைத்துக் கொண்டனர். நரி மகிழ்ந்தது. ஏனென்றால் சிங்கமும் யானையும் பிரிந்துவிட்டால், காட்டில் தன்னுடைய செல்வாக்கு அதிகரிக்கும் என்று அதற்குத் தெரியும். ஒருநாள் வயதான ஆந்தை அந்த சர்வேயைப் பார்த்தது. அது கேட்டது: “இந்த சர்வேயில் எத்தனை விலங்குகளிடம் கேட்டீர்கள்?” நரி அமைதியாக இருந்தது. “எந்தப் பகுதியில் கேட்டீர்கள்?” மீண்டும் அமைதி. “யாரிடம் கேட்டீர்கள்? கேள்விகள் என்ன? முடிவுகளை எப்படி கணக்கிட்டீர்கள்?”
நரியிடம் எந்தப் பதிலும் இல்லை. அப்போது ஆந்தை சிரித்துக் கொண்டு சொன்னது: “இது கருத்துக்கணிப்பு அல்ல. கருத்தை உருவாக்குவதற்காக தயாரிக்கப்பட்ட ஒரு கதை.” சிங்கமும் யானையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவர்கள் புரிந்து கொண்டார்கள்: தங்களைப் பிரித்தது மக்கள் கருத்து அல்ல. மக்கள் கருத்து என்ற பெயரில் சொல்லப்பட்ட ஒரு பொய். அன்றிலிருந்து அவர்கள் ஒரு முடிவு எடுத்தார்கள்: “எங்கள் நட்பைப் பற்றி மூன்றாவது ஒருவர் சொல்வதை நம்புவதற்கு முன், நாங்கள் ஒருவரிடம் ஒருவர் நேரடியாகப் பேசுவோம்.” நரி மட்டும் தனியாக நின்றது.
நீதி என்ன.?
“ஒவ்வொரு எண்ணும் உண்மையைச் சொல்லாது. ஒவ்வொரு சர்வேயும் மக்களின் குரல் அல்ல. சில நேரங்களில், மக்களின் குரல் என்று காட்டப்படும் எண்கள், மக்களைப் பிரிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஆயுதங்களாக இருக்கலாம்.” போலி சர்வேயின் மிகப்பெரிய வெற்றி, நீங்கள் அதை நம்புவது அல்ல,அதை நம்பி உங்கள் நண்பனை சந்தேகிப்பதுதான் என அந்த பதிவில் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
Author : கு. அஜ்மல்கான்

