மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் அரசுப் பொருட்காட்சியை 53 ஆயிரத்து 500 நபர்கள் பார்வையிட்டுள்ளனர் அரசுப் பொருட்காட்சியின் வாயிலாக அரசுக்கு 7 இலட்சத்து 59 ஆயிரத்து 155 ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் அரசுப் பொருட்காட்சி
மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் அரசுப் பொருட்காட்சியை இதுவரை 53 ஆயிரத்து 500 நபர்கள் பார்வையிட்டுள்ளனர். அரசுப் பொருட்காட்சியின் வாயிலாக அரசுக்கு 7 இலட்சத்து 59 ஆயிரத்து 155 ரூபாய் அரசுக்கு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தமுக்கம் மைதானத்தில் அரசு சார்பில் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு பொருட்காட்சி கடந்த (14.06.2026) அன்று மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாவட்ட ஆட்சித் தலைவர், நாடாளுமன்ற, சட்டமன்ற பிரதிநிதிகள் தொடங்கி வைத்தனர். இந்தப் பொருட்காட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை, சுற்றுலாத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வனத்துறை, வேளாண்மைத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை உள்ளிட்ட 32 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
தனியார் விளையாட்டு மற்றும் கேளிக்கை அரங்குகள்
மேலும், மதுரை மாநகராட்சி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், ஆவின் உள்ளிட்ட அரசு சார்பு நிறுவனங்கள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு மக்கள் நலனுக்காக செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள், அவற்றின் பயன்பெறும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் அரசுத்துறைகளின் சார்பாக கண்கவரும் வகையில் அரங்குள் இடம்பெற்றுள்ளன. அதேபோல, இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த தனியார் விளையாட்டு மற்றும் கேளிக்கை அரங்குகள், பல்பொருள் விற்பனை அங்காடிகள் இடம்பெற உள்ளன.
தினந்தோறும் இன்னிசை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன
மேலும், தினந்தோறும் இன்னிசை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பொருட்காட்சி தினந்தோறும் மாலை 3.45 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெறுகிறது. நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 15 ரூபாயும், சிறியவர்களுக்கு 10 ரூபாயும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 5 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. 14.06.2026 முதல் 06.07.2026 அன்று வரை அரசுப் பொருட்காட்சியை 53 ஆயிரத்து 500 நபர்கள் கண்டுகளித்துள்ளனர். இந்தப் அரசு பொருட்காட்சி வருகின்ற 31.07.2026-ஆம் தேதியன்று நிறைவடைகிறது. அரசின் மக்கள் நலத் திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் மற்றும் பல்வேறு துறைகளின் சேவைகளை ஒரே இடத்தில் அறிந்து கொள்ளும் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ள மதுரை அரசு பொருட்காட்சிக்கு பொதுமக்கள் தொடர்ந்து வருகை தந்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
Author : அருண் சின்னதுரை

