Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Minister Nirmal Kumar: "தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன": அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்

Minister Nirmal Kumar: "தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன": அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்

ABP Nadu 1 week ago

காவிரி தண்ணீரை தமிழ்நாட்டிற்கு திறந்து விட உத்தரவிடக்கோரி, வரும் 3-ம் தேதி, தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக, அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், அங்கிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் வந்துவிடக் கூடாது என்று சில கட்சிகள் இங்கு வேலை செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆகஸ்ட் 3-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், காவிரி விவகாரத்தில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடக அரசு மதிக்காமல் இருந்து வருவதாக விமர்சித்தார். மேலும், கடந்த 29-ம் தேதி முதல் 3,500 கனஅடி நீரை அவர்கள் திறந்து விட்டிருக்க வேண்டும் என்றும், ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை என்றும் குற்றம்சாட்டினார். அதோடு, கர்நாடக முதல்வரும் தமிழகத்திற்கு எதிராக பேசி வருவதாகவும், வரும் 3-ம் தேதி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும், அதற்கான ஆலோசனைகள் முடிவடைந்து விட்டதாகவும் தெரிவித்தார்.

தமிழக அரசியல் கட்சிகளை குற்றம்சாட்டிய அமைச்சர்

மேலும், கர்நாடாகவில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என்ற ஒரே நிலைப்பாட்டை கொண்டுள்ளனர் என்றும், ஆனால், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், இங்கு தண்ணீர் கொண்டு வரக்கூடாது என்று வேலை செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவருக்கு எதுவும் தெரியவில்லை

தொடர்ந்து பேசிய நிர்மல் குமார், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றும் போது இருந்த அதிமுக, இரண்டு தினங்களுக்குப் பிறகு அதனை எதிர்ப்பதாகவும், உச்சநீதிமன்றத்திலும் வழக்கு போடுவதாகவும் கூறினார். மேலும், அந்தத் தீர்மானத்தை கொண்டு வந்ததே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தான் என்றும், அவருக்கு எதுவுமே தெரியவில்லை, யாரோ கொடுத்ததை படித்துள்ளார் என்றும் விமர்சித்தார்.

மேலும், முதலமைச்சர் விஜய் எந்த வகையிலாவது சுமூகமான தீர்வை கண்டு விடுவாரோ என்ற பயத்தில் தான், தமிழக அரசியல் கட்சிகள் பாஜ உடன் சேர்ந்துகொண்டு, தமிழகத்திற்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர் என்றும், இப்படி இருக்கும் போது அனைத்துக்கட்சி கூட்டத்தை எப்படி கூட்ட முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.

“ஒவ்வொரு முறை உச்சநீதிமன்றம் செல்லும்போதும் தண்ணீர் திறக்கிறார்கள்“

மேலும், நமக்கு தேவையான தண்ணீரை பெறுவதற்கான அனைத்து வழிவகைகளையும் முதல்வர் செய்து வருவதாக கூறிய அவர், கபினி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டாலும், 3500 கனஅடி என்பது 4.5 டிஎம்சி தான், அதுமட்டுமில்லாமல், கடந்த 3 மாதங்களில் 17 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும் என்று கூறினார். மேலும், ஒவ்வொரு முறையும் நாம் உச்சநீதிமன்றம் செல்லும் போது அவர்கள் தண்ணீர் திறந்து விடுகிறார்கள் என்றும், அதற்காக நாம் உச்சநீதிமன்றம் செல்லாமல் இருக்க முடியாது என்றும் கூறிய அவர், நிரந்தர தீர்வு தேவை என்றும், மேகதாது அணைக்கு எதிராக தனி வழக்கு போட வேண்டும் என்றும் கூறினார்.

Author : ஸ்ரீராம் ஆராவமுதன்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu