பறக்கும் ரயில் எனப்படும் சென்னை எம்.ஆர்.டி.எஸ். மற்றும் மெட்ரோ ரயில் எனப்படும் சி.எம்.ஆர்.எல். இணைப்புப் பணிக்கான இறுதிக்கட்ட ஒப்புதல் விரைவில் கையெழுத்தாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, எம்.ஆர்.டி.எஸ். பறக்கும் ரயில் சேவையை கையகப்படுத்த இறுதி வரைவு ஒன்றை சென்னை மெட்ரோ சமர்ப்பித்து இருந்தது. இதுதொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்கு தென்னக ரயில்வே அனுப்பி உள்ளது.
ஜூன் மாதம் கையெழுத்தாகும் ஒப்பந்தம்
ரயில்வே வாரியத்தின் ஒப்புதல் கிடைத்துவிட்டால், ஜூன் மாதம் ஒப்பந்தம் கையெழுத்தாகி, கையகப்படுத்தும் பணி உடனடியாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எம்.ஆர்.டி.எஸ் (Mass Rapid Transit System) என்பது தலைநகர் சென்னையில் உள்ள ஒரு புறநகர் ரயில் சேவையாகும். இது சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரி வரை இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேவை பல ஆண்டுகளாக, குறைந்த கட்டணத்தில் செயல்பட்டு வருகிறது. சாலைக்கு மேலே இயக்கப்பட்டு வருவதால், பறக்கும் ரயில் என்று பயணிகளால் அழைக்கப்படுகிறது.
மேம்படுத்தப்பட வேண்டிய நிலையில் பறக்கும் ரயில் சேவை
எனினும் பறக்கும் ரயிலின் கட்டமைப்பு வசதிகள் மற்றும் பயணிகளுக்கான சேவைகள் போதுமானதாக இல்லை. இவை மேம்படுத்தப்பட வேண்டிய நிலையில் உள்ளன.
இந்த நிலையில், பறக்கும் ரயில் சேவையை கையகப்படுத்தும் மெட்ரோ ஒப்பந்தம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்திய ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தால், ஜூன் மாதம் பறக்கும் ரயில் சேவையை, மெட்ரோ நிர்வாகம் கையகப்படுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கையகப்படுத்தப்பட்டால் என்ன நடக்கும்?
இதன் முக்கிய நோக்கம், பறக்கும் ரயில் சேவையை மேம்படுத்துவதாகும். மெட்ரோ ரயிலின் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, பறக்கும் ரயில் சேவையை நவீனமாகவும், பாதுகாப்பாகவும் பயணிகளுக்கு வசதியாகவும் மாற்றுவதே இதன் நோக்கம். குறிப்பாக, மெட்ரோ ரயிலுக்கு நிகராக பறக்கும் ரயில் சேவையின் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். இதன் மூலம், சென்னை நகரின் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பு மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2028 முதல் மெட்ரோ ரயில்கள்
இதைத் தொடர்ந்து 2028 முதல் பறக்கும் ரயில் வழித்தடத்தில், மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட வாய்ப்பு உருவாகும் என்றும் ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Author : க.சே.ரமணி பிரபா தேவி

