Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
நற்செய்தி..! இருசக்கர வாகனம் வாங்க மானியம்; விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு...

நற்செய்தி..! இருசக்கர வாகனம் வாங்க மானியம்; விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு...

ABP Nadu 1 week ago

மிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தகுதியான உறுப்பினர்களுக்கு இருசக்கர வாகனம் வாங்குவதற்கு ரூ.50,000/- மானியம் வழங்கும் சிறப்புத் திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இதற்கு முன் 30.06.2026 வரை என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது, விடுபட்ட தகுதியுடைய பயன்முறையாளர்கள் அனைவரும் பயன்பெறும் நோக்கில், இந்த விண்ணப்பக் கால அவகாசத்தை மேலும் 15 நாட்கள் நீட்டித்து, வருகிற 15.07.2026 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இத்தகவலை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், விடுத்துள்ள செய்திக்குறிப்பில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? தகுதிகள் மற்றும் விபரம்

இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி மற்றும் மானியம் பெற விண்ணப்பிக்கும் பயனாளிகள் பின்வரும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

* பதிவுப் சான்று: விண்ணப்பதாரர்கள் கட்டாயமாக 'உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில்' உறுப்பினராகப் பதிவு செய்திருக்க வேண்டும்.

* வயது வரம்பு: விண்ணப்பிக்கும் நாளில் பயனாளியின் வயது 18 வயது முதல் 60 வயதிற்குள் இருக்க வேண்டும்.

* பணி விவரம்: தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்களில் (மசூதிகள்) பேஷ்இமாம்கள், ஆலிம்கள், அரபி ஆசிரியர்கள், அரபி ஆசிரியைகள், முஅத்தின் மற்றும் பிலால் உள்ளிட்ட உலமாக்களாகவும், மசூதிப் பணியாளர்களாகவும் பணியாற்றுபவர்கள் இதற்குத் தகுதியானவர்கள் ஆவர்.

ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே இந்த இருசக்கர வாகன மானியம் வழங்க முன்னுரிமை அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் வழிமுறைகள்:

பயனாளிகள் இந்த மானியத் தொகையைப் பெறுவதற்கு சில முக்கிய அரசு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

1.விண்ணப்பப் படிவம் பெறுதல்: தகுதியுடைய உலமாக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் "மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் / சிறுபான்மையினர் நல அலுவலகத்திற்கு" நேரில் சென்று உரிய விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

2.ஆவணங்களை இணைத்தல்: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன், நல வாரிய உறுப்பினர் அட்டை, வயதுச் சான்று, முகவரிச் சான்று, ஓட்டுநர் உரிமம் (Driving License), மற்றும் பள்ளிவாசலில் பணியாற்றுவதற்கான சான்றிதழ் உள்ளிட்ட உரிய ஆவணங்களை இணைக்க வேண்டும்.

3.முன் அனுமதி கட்டாயம்: விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரின் உரிய ஒப்புதலைப் பெற்ற பின்னரே பயனாளிகள் இருசக்கர வாகனத்தை வாங்க வேண்டும். ஒப்புதல் பெறுவதற்கு முன்னதாக வாங்கப்படும் வாகனங்களுக்கு மானியம் கோர இயலாது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

திட்டத்தின் நோக்கம் மற்றும் பயன்கள்

இசுலாமியச் சமூகத்தில் ஆன்மீகப் பணியிலும், கல்விப் பணியிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் உலமாக்கள், தங்களின் அன்றாடப் பணிகளுக்காகவும், ஜமாத் தொடர்பான தேவைகளுக்காகவும் தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இவர்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் பொருட்டு, வாகன விலையில் கணிசமான தொகையான ரூ.50,000/-ஐ அரசு நேரடியாக மானியமாக வழங்குகிறது. இதன் மூலம் உலமாக்களின் வாழ்வாதாரமும், பணித் திறனும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்சித்தலைவரின் முக்கிய வேண்டுகோள்

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"தமிழ்நாடு அரசின் இந்த உன்னதமான திட்டத்தின் மூலம் இதுவரை விண்ணப்பிக்கத் தவறிய மற்றும் விடுபட்ட தகுதியுடைய உலமாக்கள், இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நீட்டிக்கப்பட்ட கால அவகாசமான 15.07.2026 மாலைக்குள்ளாக, பூர்த்தி செய்யப்பட்ட தங்களது விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பித்து, ஒப்புதல் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்," எனத் தெரிவித்துள்ளார். காலக்கெடு முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ளதால், தகுதியுடைய பள்ளிவாசல் பணியாளர்கள் விரைந்து செயல்பட்டு இந்த அரசு மானியத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Author : எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu