தென் மாவட்ட மக்களுக்கும், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்குச் சுற்றுலாச் செல்வோர் மற்றும் வணிகர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.
திருநெல்வேலி மற்றும் மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவைக்காலத்தை வரும் ஜூன் மாதம் வரை நீட்டிப்பதாகத் தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கோடைக்கால விடுமுறைத் தொடங்கவுள்ள நிலையில், பயணிகளின் கூடுதல் தேவையைக் கருத்தில் கொண்டு இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் வசதிக்காக இரு மார்க்கங்களிலும் வெவ்வேறு நாட்களில் இந்தச் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன்படி, வண்டி எண் 06030 என்ற திருநெல்வேலி டூ மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும். இந்த ரயிலின் சேவை வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி தொடங்கி ஜூன் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மறுமார்க்கத்தில், வண்டி எண் 06029 என்ற மேட்டுப்பாளையம் டூ திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் திங்கட்கிழமைகளில் இயக்கப்படும். இந்த ரயில் மேட்டுப்பாளையத்திலிருந்து இரவு 7.45 மணிக்குப் புறப்படும். இதன் சேவை ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் ஜூன் 8-ஆம் தேதி வரை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களைக் கழித்துவிட்டு ஊர் திரும்புவோருக்கு இந்தத் திங்கட்கிழமை இரவு நேரச் சேவை பெரும் உதவியாக இருக்கும்.
இந்தச் சிறப்பு ரயில்கள் தென் மாவட்டங்களையும் மேற்கு மண்டலத்தையும் இணைக்கும் மிக முக்கியமான வழித்தடத்தில் பயணிக்கின்றன. குறிப்பாக, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர் மற்றும் கோயம்புத்தூர் சந்திப்பு ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில் இந்த ரயில்கள் நின்று செல்லும். ஆன்மீகப் பயணம் மேற்கொள்பவர்கள் பழனிக்கும், மலைப்பிரதேசங்களுக்குச் சுற்றுலாச் செல்பவர்கள் மேட்டுப்பாளையம் வழியாக ஊட்டிக்கும் செல்ல இந்த ரயில் ஒரு வரப்பிரசாதமாகும்.
பயணிகளின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் குளிரூட்டப்பட்ட இரண்டாம் வகுப்பு (AC 2-tier), குளிரூட்டப்பட்ட மூன்றாம் வகுப்பு (AC 3-tier), படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் (Sleeper Class), மற்றும் பொது இரண்டாம் வகுப்பு (General Second Class) பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், சரக்கு மற்றும் பிரேக் வேன் பெட்டிகளுடன் சேர்த்து, மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக வசதிகள் கொண்ட பெட்டிகளும் இந்த ரயிலில் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் அனைத்துத் தரப்பு மக்களும் தங்களது பட்ஜெட்டிற்கு ஏற்ப வசதியான பயணத்தை மேற்கொள்ள முடியும்.

பொதுவாக ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் பள்ளி விடுமுறை மற்றும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். குறிப்பாகக் கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் இருந்து நெல்லை போன்ற தென் மாவட்டங்களுக்குச் செல்லும் வழக்கமான ரயில்களில் ஏற்கனவே முன்பதிவு முடிந்துவிட்ட நிலையில், இந்தச் சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு பயணிகளுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. இந்தச் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதால், கடைசி நேரத்தில் பயணம் செய்யத் திட்டமிடுபவர்களுக்குக் கூடுதல் இருக்கைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. பயணிகள் ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது செயலி வழியாகத் தங்களது இருக்கைகளை முன்பதிவு செய்துகொள்ளலாம். பண்டிகைக் காலங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இது போன்ற சிறப்பு ரயில்கள் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Author : நாகராஜ்

