சமூகம் ரசிகர் மயமாகி இருக்கிறது என தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வியடைந்ததற்கு நடிகர் பிரகாஷ்ராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சமூகம் ரசிகர் மயமாகி இருக்கிறது என தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வியடைந்ததற்கு நடிகர் பிரகாஷ்ராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஸ்டாலின் தோல்வியால் தமிழகமே அதிர்ச்சி
இந்த நிலையில் தமிழக முன்னாள் முதலமைச்சரான மு.க.ஸ்டாலின், திமுக சார்பில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். அவர் அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால் தேர்தலில் மு.க.ஸ்டாலின் எதிர்பாராத ஒரு தோல்வியை அடைந்துள்ளார். அவர் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடன் சுமார் 8,875 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். மு.க.ஸ்டாலின் தோல்வியை ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் மக்களும் அதிர்ச்சியுடன் எதிர்கொண்டுள்ளனர்.
மு.க.ஸ்டாலினின் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும், அதை நினைத்தால் தூக்கம் கூட வரவில்லை எனவும் பலரும் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட தலைவரின் தொகுதியை கவனிக்கத்தவறியவர் மீது தயவு தாட்சன்யம் இன்றி தலைமைக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகரும், திமுக ஆதரவாளருமான பிரகாஷ்ராஜ் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மு.க.ஸ்டாலினின் தோல்வி பற்றி பேசிய அவர், “வணக்கம் தமிழ்நாடு.. காமராஜர் தோற்றார். மு.க.ஸ்டாலின் தோற்றிருக்கிறார். சமூகம் ரசிகர் மயமாகி இருக்கிறது. அரசியல் மயமாகவில்லை என்பது நிரூபணமாகிறது. அரசியல் விழிப்புணர்வு செய்பவர்களின் பணி என்பது எப்போதும் எதிர்க்கட்சி பணிதான். தொடர்ந்து பயணிப்போம். வெற்றி பெற்றவர்களின் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார். காமராஜருடன் மு.க.ஸ்டாலினை ஒப்பிட்டதற்கு இணையவாசிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இதேபோல் இயக்குநர் மாரிசெல்வராஜூம் தனது பதிவில் முதலமைச்சர் ஸ்டாலினின் தோல்வி மனதை பிசைகிறது என தனது ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Author : பேச்சி ஆவுடையப்பன்