ராயல் என்ஃபீல்ட் என்ற பெயரைக் கேட்கும்போதெல்லாம், அதன் சக்திவாய்ந்த ஒலி, உறுதியான கட்டமைப்பு மற்றும் சாலையில் அதன் கம்பீரமான தோற்றம் ஆகியவைதான் நமக்கு நினைவுக்கு வரும்.
ஆனால் இந்த முறை, இந்நிறுவனம் வாகனச் சந்தையில் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. அது, தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. ரூ.5.75 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையுள்ள இந்த பிரத்யேக மற்றும் சொகுசான பைக், இந்தியாவில் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த மூன்று நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்துவிட்டது.
நாம் ராயல் என்ஃபீல்டின் மிகவும் விலையுயர்ந்த மற்றும் பிரத்யேகமான மோட்டார் சைக்கிள்களில் ஒன்றான ஷாட்கன் 650X ரஃப் கிராஃப்ட்ஸ் லிமிடெட் எடிஷன் பற்றிப் பேசுகிறோம். முதல் பார்வையில், இது ஒரு சாதாரண பைக் போலத் தோன்றாமல், எந்தவொரு பைக் ஆர்வலருக்கும் ஒரு விலைமதிப்பற்ற பொக்கிஷமாக தெரிகிறது. எனவே, ஆர்வலர்கள் இதை வாங்க முண்டியடிக்கும் அளவிற்கு இந்த பைக்கில் அப்படி என்ன தனித்துவம் இருக்கிறது என்று தெரிந்துகொள்வோம்.
அனைத்து பைக்குகளும் 3 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன
ராயல் என்ஃபீல்ட் இந்த சிறப்புப் பதிப்பை, உலகெங்கிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பைக் பிரியர்களுக்கான ஒரு சேகரிப்புப் பொருளாக அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடலில் உலகளவில் 100 யூனிட்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன, இவற்றில் 25 யூனிட்கள் மட்டுமே இந்திய சந்தைக்காக ஒதுக்கப்பட்டன. நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ செயலி மற்றும் இணையதளத்தில் உள்ள 'டிராப் ஸோன்' மூலம் விற்பனையைத் தொடங்கிய உடனேயே, இந்தியாவில் இருந்த அந்த 25 பைக்குகளும் வெறும் மூன்று நிமிடங்களுக்குள் முன்பதிவு செய்யப்பட்டன.
இந்த வரையறுக்கப்பட்ட பதிப்பை வாங்குவதற்கான போட்டியில் பங்கேற்க, உலகம் முழுவதிலுமிருந்து 9,000-க்கும் மேற்பட்டோர் பதிவு செய்திருப்பதுதான் மிகவும் ஆச்சரியமான விஷயம். இது, இந்தியாவிலும் உலகெங்கிலும் ராயல் என்பீல்ட் ஆர்வலர்களுக்கு பஞ்சமில்லை என்பதை தெளிவாகக் காட்டுகிறது.
தைவானின் புகழ்பெற்ற பிரத்யேக வடிவமைப்பாளருடன் கூட்டு
இந்த சிறப்புப் பதிப்பின் மிகப்பெரிய சிறப்பம்சம் அதன் கூட்டாண்மைதான். ராயல் என்ஃபீல்டு, தனது பணிக்காக உலகளாவிய அங்கீகாரம் பெற்ற, தைவானைச் சேர்ந்த புகழ்பெற்ற கஸ்டம் மோட்டார்சைக்கிள் வடிவமைப்பாளரான வின்ஸ்டன் யே உடன் இணைந்துள்ளது. இந்த பைக்கின் தோற்றம், இத்தாலிய ஆட்டோ ஷோவில் பரவலான பாராட்டைப் பெற்ற கேலிபர் ராயல் கஸ்டம் மாடலைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கின் ஒவ்வொரு யூனிட்டின் எரிபொருள் டேங்க்கிலும் 1 முதல் 100 வரையிலான ஒரு தனித்துவமான எண் பொறிக்கப்பட்டுள்ளது. இது மற்ற எல்லா பைக்குகளிலிருந்தும் இதை தனித்துவமாகவும், வேறுபட்டதாகவும் ஆக்குகிறது. இதன் மூலம், இந்த தனித்துவமான எண்ணைக் கொண்ட உலகின் 100 பைக்குகளில் ஒன்றாக வாங்குபவர் இருப்பார். மேலும், ஒவ்வொரு வாங்குபவருக்கும் வின்ஸ்டன் யே கையொப்பமிட்ட ஒரு சிறப்பு கலைப்படைப்பு ஓவியம் வழங்கப்படும்.
ப்ரீமியம் வடிவமைப்பு
இந்த மோட்டார் சைக்கிள் முதல் பார்வையிலேயே அனைவரையும் நிச்சயம் கவர்ந்திழுக்கும். இது பளபளப்பான அடர் கருப்பு மற்றும் பளபளப்பற்ற ஸ்டெல்த் கருப்பு ஆகிய பிரமிக்க வைக்கும் இரட்டை வண்ணக் கலவையைக் கொண்டுள்ளது. இந்தக் கருப்பு நிறப் பூச்சானது, கையால் வரையப்பட்ட தங்க இலைக் கோடுகள் மற்றும் சாம்பல் நிற விவரங்களால் மெருகூட்டப்பட்டு, இதற்கு ஒரு கம்பீரமான தோற்றத்தை அளிக்கிறது.
இந்த பைக்கில், பிரத்தியேகமான கூட்டாண்மையைக் குறிக்கும் வகையில் ஒரு பித்தளைக் கூட்டுச் சின்னமும் இடம்பெற்றுள்ளது. தங்க நிற முன்பக்க ஃபோர்க் குழாய்கள், மாறுபட்ட வண்ணத்தில் வெட்டப்பட்ட அலாய் வீல்கள், ஹேண்டில்பார் முனைக் கண்ணாடிகள் மற்றும் தைக்கப்பட்ட உயர்தரத் தோல் இருக்கை ஆகியவை இதை ஒரு உண்மையான சாலைப் பயணக் கலைப்படைப்பாக மாற்றுகின்றன.
எஞ்சினின் சக்தி மற்றும் செயல்திறன்
இதன் தோற்றமும் வடிவமைப்பும் கணிசமாக மாற்றப்பட்டிருந்தாலும், என்ஜினின் உள் வலிமையில் நிறுவனம் எந்த சமரசமும் செய்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது, வழக்கமான ஷாட்கன் 650-ல் உள்ள அதே நம்பகமான மற்றும் சக்திவாய்ந்த 648சிசி பேரலல்-ட்வின், காற்று/எண்ணெய் குளிர்விக்கப்பட்ட என்ஜினைக் கொண்டுள்ளது.
இந்த சக்திவாய்ந்த என்ஜின் 47 hp ஆற்றலையும் 52.3 Nm முறுக்குவிசையையும் உற்பத்தி செய்கிறது. 6-வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த என்ஜின், நீண்ட பயணங்களின்போதும் கூட மென்மையான மற்றும் வசதியான பயணத்தை வழங்குகிறது. வேகம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக டூயல்-சேனல் ஏபிஎஸ் அமைப்பும் இதில் உள்ளது.
மொத்தத்தில், இந்த ரூ.5.75 லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள் வெறும் ஒரு போக்குவரத்து சாதனம் மட்டுமல்ல, அது அடையாளம் மற்றும் கௌரவத்தின் சின்னமாகவும் விளங்குகிறது. அதனால்தான், அதிக விலை இருந்தபோதிலும், இந்த பிரத்தியேக பைக்கை வாங்குவதற்கு வெறும் மூன்று நிமிடங்களே போதுமானதாக இருந்தது.
Author : ஸ்ரீராம் ஆராவமுதன்

