கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் யாருமே எதிர்பாராத வகையில் தோல்வியடைந்திருக்கிறார்.
இது திமுகவினர் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலினே தான் தோல்வியடைவோம் என்று கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார். ஆனால், அது நடந்து முடிந்துவிட்டது.
சேகர்பாபுதான் காரணம்
குறிப்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலினின் தோல்விக்கு காரணமே அமைச்சராக இருந்த சேகர்பாபுதான் என்று குமுறுகிறார்கள் உடன்பிறப்புகள். சேகர்பாபுவின் தன்னிச்சையான முடிவுகளும், நிர்வாகிகளையும், கட்சித் தொண்டர்களை மதிக்காமல் எப்போதுமே சென்னையின் மன்னர் என்று தன்னை நினைத்துக்கொண்டு அவர் செயல்பட்டதுமே மு.க.ஸ்டாலின் தோல்வியடைய முக்கிய காரணம் என்றும் அதே நேரத்தில் எதிர்தரப்பில் நிற்பவரின் பலத்தை பற்றி எந்த கவலையும்படாமலும் கள நிலவரத்தை புரிந்துகொள்ளாமலும் சேகர்பாபு தான்தோன்றித்தனமாக செயல்பட்ட காரணத்தாலும் மு.க.ஸ்டாலினுக்கு தோல்வி கிடைத்திருக்கிறது என்று வருத்தப்படுகிறார்கள் திமுகவினர்.
உண்மையை மறைத்தாரா சேகர்பாபு
இந்த முறை தொகுதி மாறி, சொந்த ஊரான திருவாரூர் தொகுதியில் போட்டியிடலாம் என குடும்ப உறுப்பினர்கள் மு.க.ஸ்டாலினிடம் கேட்டபோதுகூட, சேகர்பாபு மீது இருந்த கண்மூடித்தனமான நம்பிக்கையால், கொளத்தூர் தொகுதியிலேயே ஸ்டாலின் போட்டியிட்டதாகவும், களம் திமுக ஆதரவில் இருந்து மாறி வருவது குறித்த தகவல்களை பெரிதாக கண்டுகொள்ளாமலும் அது குறித்த விவரங்களை மு.க.ஸ்டாலினிடம் தெரிவிக்காமலும் சேகர்பாபு மறைத்துவிட்டதாக குமுறுகிறார்கள் கட்சியினர்
கட்சித் தலைவர் தோற்கலாமா?
திமுகவில் யார் தோற்றாலும், வென்றாலும் கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலினை அந்த தொகுதி பொறுப்பாளரான சேகர்பாபு தோற்கவிட்டிருக்கக் கூடாது என்றும் முதலமைச்சராக இருந்தவர் இப்படி தமிழக வெற்றிக் கழகத்தின் வி.எஸ்.பாபுவிடம் வெற்றி வாய்ப்பை இழந்ததற்கு சேகர் பாபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்களும் அறிவாலயத்தில் எழுந்திருக்கிறது.
Author : வசந்த்

