சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் ஜூன் 1ம் தேதி முதல் புதிய கால அட்டவணையின்படி புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதற்கான கால அவட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையின் முக்கிய போக்குவரத்து சாதனமாக மின்சார ரயில்கள் திகழ்கிறது.
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், வேளச்சேரி வரையிலும் இந்த மின்சார ரயில் சேவையானது உள்ளது. அதேபோல் சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி என பல மார்க்கங்களிலும் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. அதிகாலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை இந்த ரயில்கள் இயக்கப்படும் நிலையில் அதனை லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
ஜூன் 1 முதல் புதிய அட்டவணை
இந்த நிலையில் ஜூன் 1ம் தேதி முதல் சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில் சேவை மாற்றம் காணவுள்ளது. வழக்கமாக இயக்கப்படும் ரயில்களின் சேவை குறைக்கப்படாமல் நேரம் மட்டும் மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக பகல் நேரங்களில் பல ரயில்களின் நேரம் மாற்றம் கண்டுள்ளது.
அதன்படி, "வார நாட்களில் நாள் ஒன்றுக்கு 106 சேவைகளும், ஞாயிற்றுக்கிழமைகளில் 97 சேவைகளும் இயக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை கடற்கரையிலிருந்து மதியம் 12.15 மணிக்கு புறப்படும் ரயில் ஜூன் 1 முதல் மதியம் 1.15க்கு செல்லும் எனவும், மதியம் 2 மணிக்கு புறப்படும் ரயில் இனி 2.40க்கு கிளம்பும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் மதியம் 2.40 மணிக்கு புறப்படும் ரயில் 3.25 மணிக்கும், மதியம் 3.15 மணிக்கான ரயில் 3.55 மணிக்கும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் வழக்கமாக அதிகாலை 4:10 மணி முதல் காலை 7 மணிக்கும் இடையில் சென்னை கடற்கரையிலிருந்து புறப்படும் ரயில்கள் சுமார் ஐந்து நிமிடங்கள் முன்னதாக புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரையிலிருந்து அரக்கோணம் செல்லும் இரு ரயில்களும் 5 நிமிடம் முன்னதாக புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய கடைசி ரயில் இரவு 11.59 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவைப் பார்த்தால் இன்றைக்கும் பயம் இருக்கு.. தவெகவை அட்டாக் செய்த டிஆர்பி ராஜா!
அதேபோல் தொடர்ந்து நடைபெற்று வரும் தண்டவாள பராமரிப்பு பணிகளின் காரணமாக சென்னை மூர் மார்க்கெட் - அரக்கோணம் - திருத்தணி வழித்தடத்தில் சில ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அரக்கோணம் - சென்னை மூர் மார்க்கெட் வழித்தடத்தில் 25 ரயில்கள் பகுதியாக ஜூன் 1 முதல் ஜூன் 5ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Author : பேச்சி ஆவுடையப்பன்

