ஐபிஎல் 2026 சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.
அந்த அணியின் இளம் பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷிக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்போவதாக சமூக ஆர்வலர் சி.எம். சிவகுமார் நாயக் விடுத்துள்ள மிரட்டல் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷியை தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வைப்பது குழந்தை தொழிலாளர் சட்டத்தை மீறும் செயல் என்று சிவகுமார் நாயக் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக கன்னட செய்தி ஊடகம் ஒன்றில் பேசிய அவர், வைபவ் சூர்யவன்ஷி ஒரு சிறுவன் என்றும், அவர் சுரண்டப்படுவதாகவும் தெரிவித்தார். இவ்வளவு சிறிய வயதில் ஒரு மைனர் சிறுவனை ஐபிஎல் போன்ற மிகப்பெரிய லீக் தொடரில் விளையாட அனுமதிப்பது அப்பட்டமான குழந்தை தொழிலாளர் முறை என்று அவர் சாடியுள்ளார். மேலும், இந்த வயதில் வைபவ் தனது கல்வியில் கவனம் செலுத்தி பள்ளிக்கூடம் செல்ல வேண்டுமே தவிர, மைதானத்தில் கிரிக்கெட் விளையாடக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த விவகாரத்தை மிகத் தீவிரமாக முன்னெடுத்துள்ள சிவகுமார் நாயக், குழந்தை உரிமைகள் மற்றும் குழந்தை தொழிலாளர் சட்டங்களை மீறியதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகத்தின் மீது காவல்துறை புகார் அல்லது சட்ட ரீதியான வழக்கை தொடரப் போவதாகத் தெரிவித்துள்ளார். வைபவ் சூர்யவன்ஷியை ஐபிஎல் போட்டிகளில் விளையாட அனுமதிக்கக் கூடாது என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.
பீகாரைச் சேர்ந்த இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷியை கடந்த 2025 ஐபிஎல் ஏலத்திலேயே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒப்பந்தம் செய்தது. அவருக்கு ஒரு சீசனுக்கு 1.1 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. மிக இளம் வயதிலேயே கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர் என்ற பெருமை ஒருபுறம் இருந்தாலும், தற்போது எழுந்துள்ள இந்த சட்ட ரீதியான மிரட்டல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு புதிய தலைவலியை உருவாக்கியுள்ளது.
Author : ஜேம்ஸ்

