தோல்வியை தழுவிய ஸ்டாலின்
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதில் யாரும் எதிர்பாராத வகையில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் திராவிட மாடல் 2.o ஆட்சி அமையும் என எதிர்பார்த்திருந்த திமுகவினருக்கு மிகப்பெரிய ஷாக் கிடைத்துள்ளது. முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வி சந்தித்துள்ளார். தமிழகத்தில் வேறு எந்த தொகுதியிலும் இல்லாத வகையில் கொளத்தூர் தொகுதியில் பல்வேறு திட்டங்களை ஸ்டாலின் செயல்படுத்தியுள்ளார். மிகப்பிரம்மாண்டமான மருத்துவமனை, நூலகம், படிப்பகம், கல்யாண மண்டபம், சாலை வசதி என அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கொளுத்தூரில் அரசின் திட்டங்கள்
இது மட்டுமில்லாமல் கொளத்தூர் மக்கள் புகார் தெரிவித்த அடுத்த நிமிடமே குறைகளை தீர்க்கும் வகையில் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. எனவே கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் எளிதாக வெற்றி பெற்று விடுவார் என எதிர்பார்த்த திமுகவினருக்கு அதிர்ச்சி கிடைத்துள்ளது. இந்த நிலையில் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் 8795 வாக்குகள் வித்தியாத்தில் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் இந்த தோல்விக்கு யார் காரணம் திமுக வட்டாரத்தில் கேட்டதில், வட சென்னையில் திமுகவின் தளபதியாக செயல்பட்ட அமைச்சர் சேகர்பாபுவை நோக்கி கைகள் நீளுகிறது. கொளுத்தூர் தொகுதியின் எம்எல்ஏவாக ஸ்டாலின் இருந்தாலும், சேகர்பாபு தான் முழு கட்டுப்பாட்டில் தொகுதியை வைத்திருந்தார்.
தோல்விக்கு காரணம் யார்.?
திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினரை மதிக்காத செயல் என அடுத்தடுத்து புகார்கள் கூறப்படுகிறது. மேலும் தொகுதியின் வெற்றி வாய்ப்பு தொடர்பாக உரிய தகவல்களை தலைமையிடம் கொண்டு செல்லாததும் புகாராக கூறப்படுகிறது. எனவே கடந்த 2011ஆம் ஆண்டு முதல் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வரும் ஸ்டாலின், குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே தொடர்ந்து வெற்றி பெற்று வந்தார். எனவே இந்த முறை திருவாரூர் தொகுதிக்கு மாறியிருந்தால் எளிதாக வெற்றி பெற்றிருக்க முடியும் என கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் திமுக முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன் வெளியிட்டுள்ள சமூகவலைதளபதிவில், என் தலைவர் தோல்வியை தான் என்னால் தாங்கமுடியவில்லை. சாதாரனமாக கடந்து செல்லவும் முடியவில்லை. உரியவர்கள் பொறுப்பேற்க்க வேண்டும் என தெரிவித்திருந்தவர், அடுத்த பதிவில் எனக்கு இரவு முழுவதும் உறக்கமில்லை இந்த முகமே என் கண்களை மூடினாலும் வந்துகொண்டே இருக்கிறது. அப்பழுக்கற்ற அரசியல் தலைவர்! யாருக்கும் தீங்கு நினைக்காத தலைவர்! குழந்தை உள்ளம் கொண்ட தலைவர்! தேர்தல் அரசியலில் வெற்றி தோல்வி என்பது இயற்கை இவை இரண்டின் உச்சத்தையும் பார்த்த இயக்கம் திமுக.
சேகர்பாவுவை குறிவைக்கும் திமுக நிர்வாகிகள்
ஆனால் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட தலைவரின் தொகுதியை கவனிக்கத்தவறியவர் மீது தயவு தாட்சன்யம் இன்றி தலைமைக்கழகம் நடவடிக்கை எடுத்தால் தான் உண்மை திமுக தொண்டன் நிம்மதியாய் இருப்பான். தலைவர் தோல்விக்கு காரணமானவர் எப்படி கொஞ்சமும் வெட்கம், பயம், அச்சம், கூச்சம் எதுவும் இல்லாமல் தலைவர் முன்பு வந்து முகத்தைக்காட்டி நிற்கிறார்? நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னது இதைத்தானா சேகர்பாபு என பரந்தாமன் கேள்வி எழுப்பியுள்ளார். இதே போல சென்னை மாநகராட்சி கவுன்சிலர் பரிதி இளம் சுருதியும் சேகர்பாபு தான் ஸ்டாலின் தோல்விக்கு காரணம் என சமூகவலைதளத்தில் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Author : கு. அஜ்மல்கான்

