தமிழக தேர்தல் - களத்தில் பாஜக அமைச்சர்கள்
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. வெறும் 17 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் விரைவுப்படுத்தியுள்ளது.
இதனையடுத்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் திமுக தலைவர் ஸ்டாலின் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதற்கு போட்டி போடும் வகையில் பாஜகவினரும் களத்தில் இறங்கியுள்ளனர். மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதலமைச்சர்களும் தமிழகத்தில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கேள்வி எழுப்பிய ஸ்டாலின்
இந்த நிலையில் இது தொடர்பாக திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், தமிழ்நாட்டுக்கு வரும் ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர்களும் மற்றும் பா.ஜ.க. முதலமைச்சர்களும் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்வார்களா? தமிழ் மண்ணில் நின்று, "மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம்" என்று சொல்லி பரப்புரை செய்யத் தயாரா?
நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டுக்குத் தருவது எவ்வளவு? பா.ஜ.க.வால் ஆளப்படும் செல்லக்குழந்தை மாநிலங்களுக்குத் தருவது எவ்வளவு? வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா? கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடுக்கும் FCRA சட்டத்திருத்தத்தை முழுமையாகத் திரும்பப் பெறுவீர்களா அல்லது அடுத்த வாரமே நிறைவேற்றப் போகிறீர்களா? இவற்றுக்கெல்லாம், பழனிசாமி அவர்களால் தனது டெல்லி ஓனர்களிடம் பதில் பெற்றுத் தர முடியுமா?
தமிழ்நாடு தலைகுனியாது! தமிழ்நாடு போராடும்!
கண்ணியமற்ற அவதூறுகளை வாந்தி எடுப்பதை விடுத்து, மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினைகளை எப்போதுதான் பேசுவீர்கள்? தமிழ்நாட்டைத் துண்டாட எத்தனை பேர் டெல்லியில் இருந்து படையெடுத்து வந்தாலும், தமிழ்நாடு தலைகுனியாது! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! வெல்வோம் ஒன்றாக! என அந்த பதிவில் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
Author : கு. அஜ்மல்கான்

