Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
திரைக்குப் பின்னால் ஒரு பேரரசு: எறும்புப் புற்றின் வியப்பூட்டும் சமூகக் கட்டமைப்பும், வேலைப் பகிர்வும்!

திரைக்குப் பின்னால் ஒரு பேரரசு: எறும்புப் புற்றின் வியப்பூட்டும் சமூகக் கட்டமைப்பும், வேலைப் பகிர்வும்!

ABP Nadu 1 week ago

ஞ்சாவூர்: மனித சமூகத்தை விடவும் அதிக ஒழுக்கமும், மிகத்துல்லியமான வேலைப் பகிர்வும் கொண்டது எறும்புகளின் உலகம்.

ஒரு எறும்புப் புற்று என்பது வெறும் மண்ணால் ஆன வீடு அல்ல; அது பல்லாயிரக்கணக்கான, சில நேரங்களில் லட்சக்கணக்கான எறும்புகள் வாழும் ஒரு மிகச்சிறந்த "நவீன அடுக்குமாடி குடியரசு".

அறிவியல் பூர்வமாக எறும்புகள் 'யூசோஷியல்' (Eusocial) உயிரினங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அதாவது, கூட்டு வாழ்க்கை, வேலைப் பகிர்வு மற்றும் அடுத்த தலைமுறையை இணைந்து வளர்த்தல் போன்ற உயர்தர பண்புகளைக் கொண்டவை.

ஒரு எறும்புப் புற்றை நாம் உற்று நோக்கினால், அங்கு எந்த ஒரு தனி நபரோ அல்லது தலைவரோ கட்டளையிடுவதைக் காண முடியாது. ஆனால், அங்குள்ள ஒவ்வொரு எறும்பும் தனக்கு என்ன வேலை என்று தெரிந்து, அதை ஒரு நொடி கூட வீணடிக்காமல் செய்து கொண்டிருக்கும். எறும்புகளின் இந்த சமூகக் கட்டமைப்பு மூன்று முக்கிய பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

ராணி எறும்பு - பேரரசின் அச்சாணி!

ஒரு புற்றின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் ராணி எறும்பைச் சுற்றித்தான் இயங்குகிறது. மற்ற எறும்புகளை விட அளவில் பெரியதான இதன் ஒரே வேலை முட்டையிடுவது மட்டும்தான். ஆயுட்காலம்: ஆச்சரியமாக, ஒரு ராணி எறும்பு 15 முதல் 30 ஆண்டுகள் வரை உயிர் வாழும் திறன் கொண்டது. ராணி எறும்பு புற்றை ஆட்சி செய்வதில்லை, ஆனால் அது சுரக்கும் ஒருவித ரசாயனம் (Pheromones) புற்றில் உள்ள மற்ற எறும்புகளைக் கட்டுப்பாட்டிலும், ஒழுங்கிலும் வைக்க உதவுகிறது. ராணி எறும்பு இறந்துவிட்டால், புதிய முட்டைகள் உருவாகாது என்பதால் ஒட்டுமொத்த புற்றும் சில மாதங்களில் அழிந்துவிடும்.

ஆண் எறும்புகள் - குறுகிய கால விருந்தினர்கள்!

ஆண் எறும்புகளுக்கு சிறகுகள் இருக்கும். இவற்றுக்கு புற்றிற்குள் எந்த வேலைகளும் கிடையாது. இவற்றின் ஒரே கடமை, ராணி எறும்புடன் இணசேர்வது (Mating) மட்டுமே. இனப்பெருக்கக் காலத்திற்குப் பிறகு, இந்த ஆண் எறும்புகள் புற்றிற்கு வெளியே இறந்துவிடுகின்றன. இவற்றின் ஆயுட்காலம் மிகக் குறைவு (சில வாரங்கள் மட்டுமே).

வேலைக்கார எறும்புகள் - புற்றின் உண்மையான ஹீரோக்கள்!

புற்றில் இருக்கும் 99% எறும்புகள் வேலைக்கார எறும்புகள் தான். இவை அனைத்தும் இனப்பெருக்கத் திறனற்ற பெண் எறும்புகள் ஆகும். இவற்றுக்கு சிறகுகள் இருக்காது. இவற்றுக்குள்ளும் வயது மற்றும் திறமையின் அடிப்படையில் வேலைகள் பிரிக்கப்பட்டுள்ளன:

செவிலியர் எறும்புகள்: இளம் வயது எறும்புகள் புற்றின் உள்பகுதியிலேயே தங்கி, ராணி இடும் முட்டைகளையும், லார்வாக்களையும் (கூட்டுப்புழுக்கள்) பாதுகாத்து, அவற்றுக்கு உணவூட்டும் செவிலியர் பணியைச் செய்கின்றன.

கட்டுமானப் பொறியாளர்கள்: புற்றைத் தோண்டுவது, புதிய அறைகளை உருவாக்குவது, சேதமடைந்த பகுதிகளைப் பழுதுபார்ப்பது போன்ற கடினமான வேலைகளைச் செய்யும் எறும்புகள்.

துப்புரவுப் பணியாளர்கள்: புற்றிற்குள் எந்தப் பகுதியிலும் கழிவுகளோ அல்லது இறந்த எறும்புகளின் உடல்களோ தேங்கிவிடாமல், அவற்றை உடனுக்குடன் புற்றிற்கு வெளியே கொண்டு போய் கொட்டும் பொறுப்பு இவர்களுடையது.

உணவு சேகரிப்பாளர்கள்: வயது முதிர்ந்த, அனுபவம் வாய்ந்த எறும்புகள் தான் புற்றை விட்டு வெளியேறி தூரமான இடங்களுக்குச் சென்று உணவைத் தேடிக் கொண்டு வருகின்றன. வெளியில் ஆபத்துகள் அதிகம் என்பதால், வயதான எறும்புகள் இப்பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன.

போர்வீரர் எறும்புகள்- எல்லையைக் காக்கும் ராணுவம்!

வேலைக்கார எறும்புகளிலேயே பெரிய தலை மற்றும் கூர்மையான தாடைகளைக் கொண்ட எறும்புகள் 'சிப்பாய் எறும்புகள்' என வகைப்படுத்தப்படுகின்றன. புற்றின் நுழைவாயிலில் நின்றுகொண்டு, வேற்றுப் புற்று எறும்புகளோ அல்லது பிற பூச்சிகளோ உள்ளே நுழையாதவாறு இவை எல்லையைக் காவல் காக்கின்றன. ஆபத்து காலத்தில் இவை தங்களின் உயிரைக் கொடுத்தும் புற்றைக் காப்பாற்றும்.

எறும்புகளின் உலகிலிருந்து மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய மிகப்பெரிய பாடம் "ஒற்றுமை" மற்றும் "சுயநலமின்மை". தனக்கென வாழாமல், ஒட்டுமொத்த சமூகத்தின் வளர்ச்சிக்காகத் தியாக உணர்வுடன் உழைக்கும் எறும்புகளின் கட்டமைப்பு இயற்கையின் ஆகச்சிறந்த அதிசயம்.

Author : என்.நாகராஜன்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu