அதிக தொகுதிகளை வென்ற தவெக
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை நீடித்து வருகிறது.
அந்த வகையில் நடிகர் விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணி 73 தொகுதிகளிலும், அதிமுக 53 தொகுதிகளிலும் வெற்றியடைந்துள்ளது. இதனால் ஆட்சி அமைக்க தேவையான 118 என்ற இலக்கை எந்த கட்சியும் பெறவில்லை. இதனால் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் இணைந்து ஆட்சி அமைக்க தவெக திட்டமிட்டு கடிதம் எழுதியது. இதனையடுத்து இது தான் சான்ஸ் என காத்திருந்த காங்கிரஸ் கட்சி 5 எம்எல்ஏக்களோடு முதல் ஆளாக தவெகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
தவெகவிற்கு காங்கிரஸ் ஆதரவு
இது மட்டுமில்லாமல் வருகிற உள்ளாட்சி மன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும் என அறிவித்துள்ளது. இதனையடுத்து 113 எம்எல்ஏக்கள் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக கூறி அதற்கான கடிதத்தோடு ஆளுநரை சந்தித்து விஜய் ஆட்சி அமைக்க அனுமதி கோரினார். ஆனால் 118 என்ற பெரும்பான்மை இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க வாய்ப்பு தரப்படும் என ஆளுநர் தெரிவித்துவிட்டார். இதனால் என்ன செய்வது என தெரியாமல் தவெகவினர் தவித்து வருகிறார்கள். மேலும் கடந்த இரண்டு நாட்களாக விஜய்க்கு கொடுக்கப்பட்டிருந்த முதலமைச்சருக்கான கான்வாய் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.
பெரும்பான்மை இல்லாமல் தவிக்கும் தவெக
இந்த சூழலில் தவெகவிற்கு இருக்கும் வாய்ப்பாக விடுதலைசிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு மட்டுமே, தற்போது உள்ள நிலையில் நாளைய தினம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டம் நடைபெறவுள்ளது. அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆலோசனை கூட்டமும் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. அப்போது தவெகவிற்கு ஆதரவு அளிப்பதா.? இல்லையா.? என்பது தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளது. அதே நேரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை தவெகவிற்கு ஆதரவு இல்லையென்ற நிலைப்பாட்டில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு தவெகவுடன் கூட்டணி அமைக்க விரும்பவில்லையென கூறப்படுகிறது. இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு தவெகவிற்கு கிடைக்காது என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி
விஜய் முதலைச்சராக அவருக்கு இருக்கும் மற்றொரு வாய்ப்பு அதிமுகவின் ஆதரவை தேடுவது தான், அந்த வகையில் ஏற்கனவே அதிமுக எம்எல்ஏக்களில் ஒரு பிரிவினர் தவெகவிற்கு ஆதரவு கொடுக்கலாம் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். எனவே அதிமுகவினர் பல்டி அடிப்பதை தடுக்க புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நாளைய தினம் தவெக பெரும்பான்மையை நிரூபிக்க கடைசி நாளாக உள்ளது. அது முடியாத பட்சத்தில் அடுத்ததாக திமுகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க கூடும். ஆனால் தற்போது திமுக ஆட்சி அமைக்க விரும்பாத நிலையில் உள்ளது. எனவே யாரும் ஆட்சி அமைக்க முடியாத சூழலில் தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
Author : கு. அஜ்மல்கான்

