TVK Vijay Nomination Affidavit: தவெக தலைவர் விஜயின் வேட்புமனுவில் நிலவும் குளறுபடி சரிசெய்யப்படவிட்டால், அவரது மனு நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
விஜயின் வேட்புமனுவில் குளறுபடி..!
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சி மூலம், 234 தொகுதிகளிலும் விஜய் தனித்து போட்டியிடுகிறார். குறிப்பாக அவர் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் களம் காண்கிறார். அதன்படி கடந்த 30ம் தேதியன்று பெரம்பூர் தொகுதியிலும், அதைதொடர்ந்து நேற்று திருச்சி கிழக்கிலும் வேட்புமனு தாக்கல் செய்தார். அதில் தனது சொத்து விவரங்கள் மற்றும் தனக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களையும் குறிப்பிட்டு பிரமாண பத்திரங்களையும் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், இரண்டு தொகுதிகளில் சமர்பிக்கப்பட்ட பிரமாண பத்திரங்களில், தனக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பான விவரங்கள் வேறுபட்டு இருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வேட்புமனுக்களில் உள்ள வித்தியாசம் என்ன?
பெரம்பூரில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவில் தனக்கு எதிராக எந்தவொரு குற்றவியல் வழக்கும் நிலுவையில் இல்லை என குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், திருச்சி கிழக்கு தொகுதிக்கான பிரமாண பத்திரத்தில் கடந்த 30ம் தேதியன்று சென்னை பெரவள்ளூர் காவல்நிலையத்தில் தனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், “கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பரப்புரையின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதவாது 30ம் தேதி பெரம்பூரில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட பிறகு தான் இந்த வழக்கு பதிவாகியிருப்பதால், பிரச்னையாக வாய்ப்பில்லை.
அதேநேரம், ”கடந்த 21.08.2025 மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டில் தலைவர் விஜய் அவர்கள் நடைமேடை (Ramp Walk) நடந்து வரும்போது தலைவரை பார்த்தவுடன் ஆர்வத்தில் நடைமேடையில் புகார்தாரர் ஏறியதாகவும் அப்பொழுது 10 புகார்தாரரை இடிந்து தள்ளியும் அசிங்கமாக பேசியும் இடித்து தள்ளியதில் நெஞ்சுக்காயம் மற்றும் உள்காயம் ஏற்பட்டதாக புகார்” அளிக்கப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், “இந்த குற்றவழக்கு பற்றி காவல்துறையிடமிருந்து எந்தவித சம்மனோ, தகவலோ வரவில்லை. தற்போது தான் இந்த வழக்கின் விவரம் தெரிய வந்ததால், இவ்வழக்கு குறித்து இதில் குறிப்பிடப்பட்டுள்ளது” என விஜய் தெரிவித்துள்ளார்.
மதுரை வழக்கால் சிக்கல்?
மதுரை மாநாடு தொடர்பான வழக்கு குறித்த தகவல்கள் ஏதும், பெரம்பூரில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து உடனடியாக இதுதொடர்பான விவரங்கள் சேர்க்கப்பட்ட புதிய பிரமாண பத்திரத்தை பெரம்பூரில் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் விஜய்க்கு ஏற்பட்டுள்ளது. பரிசீலனைக்கு முன்பாக இதுதொடர்பான விவரங்களை விஜய் தாக்கல் செய்யாவிட்டால், அவரது வேட்புமனுவே பெரம்பூர் தொகுதியில் நிராகரிக்கப்படலாம். பின்பு, திருச்சி கிழக்கு தொகுதியில் மட்டுமே வேட்பாளராக களமிறங்கக் கூடும்.
இணையத்தில் விமர்சனம்..
ஒரு கட்சியின் தலைவரின் வேட்புமனுவையே இப்படி கவனக்குறைவாக கையாண்டால், கட்சியில் உள்ள பிற வேட்பாளர்கள் நிலைமை என்ன என்பது குறித்து நினைத்து கூட பார்க்க முடியவில்லை என நெட்டிசகள் விமர்சித்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் தன் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை வெளியிடுமாறு தமிழக காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்திருந்தால் மொத்த விவரங்களையும் பெற்றிருக்க முடியும். இந்த அடிப்படை விவரம் கூட தவெக நிர்வாகத்திற்கு தெரியவில்லையா? என நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர்.
Author : குலசேகரன் முனிரத்தினம்

