சபரிமலை ஐயப்பன் கோயிலில் சிறுமிகள், மூதாட்டிகள் மட்டும் வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது. மாதவிடாய் பருவ பெண்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கப்படுவதில்லை.
இதுதொடா்பான மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த 2018-ஆம் ஆண்டில் அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோயிலில் வழிபாடு நடத்த அனுமதித்து தீா்ப்பளித்தது. இந்தத் தீா்ப்பை எதிா்த்து, உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் மறு ஆய்வு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனா். இந்த மனுக்கள், உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் தற்போது உள்ளது.

கேரளத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உள்பட மத வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு, பல்வேறு மதங்களில் பின்பற்றப்படும் மதச் சுதந்திரத்தின் வரம்பு தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை, தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு விசாரித்து வருகிறது.
இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தது. அப்போது கடந்த 2018-ஆம் ஆண்டு அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோவிலுக்குள் நுழையலாம் என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளிக்கக் காரணமான மனுவைத் தாக்கல் செய்த இந்திய இளம் வழக்குரைஞா்கள் கூட்டமைப்பிடம், சில கடுமையான கேள்விகளை நீதிபதிகள் அமா்வு எழுப்பியது. அந்தக் கூட்டமைப்பும் தற்போது பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ள நிலையில், ‘எதற்காக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது? இந்திய இளம் வழக்குரைஞா்கள் கூட்டமைப்புதான் நாட்டின் தலைமை அா்ச்சகரா?’ என்று தலைமை நீதிபதி சூா்ய காந்த் கேள்வி எழுப்பினாா்.
இந்திய இளம் வழக்குரைஞா்கள் கூட்டமைப்பு சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் ரவி பிரகாஷிடம், ‘இந்தக் கூட்டமைப்புக்கு மனசாட்சியே கிடையாது. உங்களைப் போன்ற சட்டரீதியான அமைப்புக்கு எப்படி கடவுள் நம்பிக்கை இருக்க முடியும்? கடவுள் நம்பிக்கை என்பது தனிநபா் சாா்ந்ததாகும். இந்தக் கூட்டமைப்புக்கு வேறு எந்த வேலையும் கிடையாதா? வழக்குரைஞா் சங்க நலனுக்கு செயல்படுதல், வழக்கில் நீதிபதிகளுக்கு அல்லது நாட்டின் நீதித் துறைக்கு உதவுதல் போன்ற பணிகளை அந்த அமைப்பால் செய்ய முடியாதா? கிராமப்புறப் பகுதிகளில் உள்ளவா்கள் நகரங்களுக்கு வந்து வழக்குகளில் வாதிடுவதில் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனா். அவா்களுக்கு உதவலாமே’ என்று நீதிபதி பி.வி.நாகரத்னா காட்டமாகத் தெரிவித்தாா்.
Author : நாகராஜ்

