மேற்கு வங்க பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியின் தனிப்பட்ட உதவியாளர் சந்திரநாத் ரத் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பதற்றத்தை தணிக்க மேற்கு வங்க மாநிலம் முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29ம் தேதிகளில் மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 293 தொகுதிகளில் பாஜக 207 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆளும் கட்சியாக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் 80 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடர்ந்து 3 முறை ஆட்சியில் இருந்த மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு முடிவு கட்டப்பட்டிருக்கிறது.
இதில் பானிபூர் தொகுதியில் போட்டியிட்ட மமதா பானர்ஜியே பாஜக மாநில தலைவர் சுவந்து அதிகாரியிடம் சுமார் 15,105 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி அதிர்ச்சி கொடுத்தார். இந்த நிலையில் அங்கு அரசியல் குழப்பம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தாங்கள் வேண்டுமென்றே தோற்கடிக்கப்பட்டுள்ளதாக மமதா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ள நிலையில் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் எனவும் விடாப்பிடியாக கூறியுள்ளார். இதனால் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

