Dailyhunt
"டெல்லி" குழந்தை கடத்தல் சந்தையாக மாறிவிட்டது - நீதிபதிகள் அதிர்ச்சி கருத்து

"டெல்லி" குழந்தை கடத்தல் சந்தையாக மாறிவிட்டது - நீதிபதிகள் அதிர்ச்சி கருத்து

APC News Tamil 1 week ago

குழந்தை கடத்தலுக்கான பெரும் சந்தையாக டெல்லி மாறிவிட்டது என டெல்லி உயர்நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது .

மேலும், குழந்தை கடத்தலை தடுக்க போதிய வழிகாட்டு நெறிமுறைகள் இருந்தும் அதனை செயல்படுத்த தவறியதால் குழந்தை கடத்தல் தொடர்வதாகவும் நீதிபதிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

குழந்தை கடத்தல் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பொதுநல வழக்கின் விசாரணை இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய ரயில்வே அமைச்சகம் டெல்லி காவல்துறையினர் மற்றும் டெல்லி அரசு குழந்தை கடத்தல் விவகாரத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறது? என கேள்வி எழுப்பியதோடு டெல்லி ரயில் நிலையம் மற்றும் நிஜாமுதீன் ரயில் நிலையத்திற்கு சென்று இரண்டு மணி நேரம் அங்கு சுற்றித்திரிந்தாலே அங்கு நிலை என்ன என்பதை ஒவ்வொரு அதிகாரிகளாலும் உணர முடியும் என தலைமை நீதிபதி தெரிவித்தார்.

மேலும் குழந்தை கடத்தலுக்கு டெல்லி மிகப்பெரிய சந்தையாக மாறிவிட்டது என கவலை தெரிவித்த நீதிபதிகள், குழந்தை கடத்தலை தடுக்க ஏற்கனவே வழிகாட்டு நெறிமுறைகள் இருந்த போதிலும் இன்னும் குழந்தை கடத்தல் எண்ணிக்கை குறையவில்லை என்றும், இதற்கான காரணம் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக அமல்படுத்தாததே என குற்றம் சாட்டினர்.

டெல்லியில் நடைபெறும் குழந்தை கடத்தல் தொடர்பான கூடுதல் ஆவணங்களை தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டதோடு, டெல்லி அரசு மற்றும் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் நான்கு வாரங்களுக்குள் வழக்கில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.

இதேபோல் மத்திய ரயில்வே அமைச்சகம், டெல்லி காவல்துறை ஆணையர் & தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையம் உள்ளிட்டோரும் தனித்தனியாக பிரமாண பத்திரங்களை 6 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட டெல்லி உயர் நீதிமன்றம், பிரமாண பத்திரம் மட்டுமின்றி குழந்தை கடத்தல் தொடர்பான தரவுகளையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். சமர்ப்பிக்கப்படும் தரவுகள் மூலம் குழந்தை கடத்தலை தடுக்க தேவையான கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகள் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படும் என டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளாா்.

"போட்டிகளைப் பார்க்க விருப்பமில்லையெனில் வீட்டிலேயே இருக்கலாம்" - நீதிபதிகள் கருத்து…

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: APC News Tamil