Dailyhunt
மேற்குவங்கத்தில் நீதித்துறை அதிகாரிகள் சிறைபிடிப்பு: "திட்டமிட்ட சதி" என உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

மேற்குவங்கத்தில் நீதித்துறை அதிகாரிகள் சிறைபிடிப்பு: "திட்டமிட்ட சதி" என உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

APC News Tamil 2 weeks ago

மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணியில் (SIR) ஈடுபட்டிருந்த ஏழு நீதித்துறை அதிகாரிகளை ஒரு கும்பல் சூழ்ந்துகொண்டு (Gherao), 9 மணி நேரத்திற்கும் மேலாகப் பிணைக்கைதிகளாக வைத்திருந்த சம்பவம், அந்தப் பணியைத் தடுப்பதற்காக செய்யப்பட்ட “திட்டமிட்ட முயற்சி” என்று உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்தது.

இந்தியத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு, இந்தச் சம்பவத்தைத் தானாக முன்வந்து (Suo Motu) விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. மாநில அரசின் செயலற்ற தன்மையை “மிகவும் கண்டிக்கத்தக்கது” என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

​மால்டாவின் காலியாசக் பகுதியில் புதன்கிழமை (ஏப்ரல் 1) மதியம் முதல் மூன்று பெண் அதிகாரிகள் உட்பட ஏழு அதிகாரிகள் சிறைபிடிக்கப்பட்டனர். நள்ளிரவு 1 மணியளவில் பலத்த போலீஸ் மற்றும் துணை ராணுவப் படையினரின் உதவியுடன் அவர்கள் மீட்கப்பட்டனர்.

​இந்தச் சம்பவத்தில் பொறுப்புடன் செயல்படாத மூத்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் நிர்வாக அதிகாரிகளுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது எனக் கேட்டு நீதிமன்றம் ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளது.

​​ “மேற்கு வங்கத்தில் நிலவுவது போன்ற அரசியல் துருவமுனைப்பை நான் இதுவரை கண்டதில்லை” என்று தலைமை நீதிபதி சூர்யா காந்த் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாகத் நள்ளிரவு 2 மணி வரை விழித்திருந்து நிலைமையைக் கண்காணித்ததாக அவர் கூறினார்.

​ மாநில அரசின் வழக்கறிஞர் கபில் சிபல், நீதிமன்ற உத்தரவில் உள்ள “அரசியலமைப்பு இயந்திரத்தின் முழுமையான முறிவு” (Complete breakdown of constitutional machinery) என்ற சொற்றொடரை நீக்குமாறு கோரினார்.

​தேர்தல் ஆணையம் இந்தச் சம்பவத்தை “ஜங்கிள் ராஜ்” (காட்டு தர்பார்) என்று விமர்சித்ததுடன், நீதித்துறை அதிகாரிகளே இவ்வாறு அச்சுறுத்தப்படுவார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்தது.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் ஈடுபட்டுள்ள நீதித்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்குப் பாதுகாப்பு வழங்க மத்தியப் படைகளைத் தயார் நிலையில் வைக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

​பாதிக்கப்பட்ட அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். ​இந்தச் சம்பவம் குறித்து சிபிஐ (CBI) அல்லது ஒரு சுதந்திரமான அமைப்பின் விசாரணைக்கு உத்தரவிட நீதிமன்றம் திட்டமிட்டுள்ளது. இது குறித்த விரிவான உத்தரவு இன்று பிற்பகல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

​வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்கள் நீக்கப்பட்டதாகக் கூறப்படும் வாக்காளர்கள் அடங்கிய கும்பலே இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

"டெல்லி" குழந்தை கடத்தல் சந்தையாக மாறிவிட்டது - நீதிபதிகள் அதிர்ச்சி கருத்து

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: APC News Tamil