கோடைக்காலத்தில் புதினா இலைகளை பசுமையாக வைத்திருப்பது பலருக்கும் சவாலாக இருக்கும்.
அதிக வெப்பத்தால் புதினா மிகவும் விரைவாக கெட்டுப்போகும். ஆனால் ஒரு எளிய முறையைப் பின்பற்றினால், புதினாவை நீண்ட நாட்கள் பாதுகாப்பாக சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
முதலில் சந்தையில் இருந்து புதினாவை வாங்கிய பிறகு, அதை 3 முதல் 4 முறை தண்ணீரில் நன்றாக கழுவ வேண்டும். பின்னர் இலைகளை மட்டும் பிரித்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைக்கவும். இந்த கலவை மிக நீர்த்ததாகவும் அல்லது மிகவும் கெட்டியாகவும் இருக்கக் கூடாது.
அதன்பின், இந்த கலவையில் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். இது புதினாவின் பச்சை நிறத்தை நீண்ட காலம் காக்க உதவும். பிறகு இந்த கலவையை ஐஸ் ட்ரேயில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்து உறைய விடவும்.
சுமார் 6 முதல் 8 மணி நேரத்தில் புதினா கட்டிகள் உறையும். அதன் பிறகு அவற்றை எடுத்து, காற்று புகாத ஜிப் லாக் பை அல்லது டப்பாவில் சேமித்து மீண்டும் ஃப்ரீசரில் வைக்க வேண்டும். இவ்வாறு வைத்தால், புதினாவை 3 மாதங்கள் வரை பாதுகாப்பாக பயன்படுத்தலாம்.
இந்த புதினா கட்டிகளை பயன்படுத்தும்போது, அவற்றை உருக விடாமல் நேரடியாக மோர், எலுமிச்சை ஜூஸ் அல்லது சட்னியில் சேர்க்கலாம். இதனால் அதன் நிறமும் சுவையும் மாறாது.
இந்த எளிய முறையைப் பயன்படுத்தி, கோடைக்காலத்திலும் புதினாவை எளிதாக சேமித்து வைத்து, தேவையான போது பயன்படுத்தி சமையலை சுலபமாக்கலாம்.

