இந்தியாவில் மே 1, 2026 முதல் சிகரெட் விலையில் பெரிய உயர்வு ஏற்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக முன்னணி புகையிலை நிறுவனங்களான ஐடிசி மற்றும் காட்ஃப்ரே பிலிப்ஸ் ஆகியவை தங்களின் சிகரெட் தயாரிப்புகளின் விலையை 17 சதவீதம் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் வெளியானதும் பங்குச் சந்தையில் ஐடிசி பங்குகள் சுமார் 4 சதவீதம் உயர்ந்தன. அதேபோல் காட்ஃப்ரே பிலிப்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 6.5 சதவீதம் வரை ஏற்றம் கண்டன.
இந்த விலை உயர்வு பிரீமியம் பிராண்டுகளுக்கு மட்டுமல்லாமல், குறைந்த விலை சிகரெட் பிராண்டுகளுக்கும் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. இதனால் சாதாரண நுகர்வோரும் நேரடியாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
உதாரணமாக, ஐடிசி நிறுவனத்தின் பிரபலமான கோல்டு ஃப்ளேக் பிரீமியம் சிகரெட் பேக்கின் விலை தற்போது ரூ.115 ஆக உள்ள நிலையில், மே மாதம் முதல் அது ரூ.135 ஆக உயரக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் மத்திய அரசு கொண்டு வந்த மத்திய கலால் (திருத்த) மசோதா 2025 காரணமாக சிகரெட் நிறுவனங்களின் வரிச்சுமை அதிகரித்துள்ளது. ஏற்கனவே சிகரெட்டுகளுக்கு 40 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 1,000 சிகரெட்டுகளுக்கு ரூ.2,050 முதல் ரூ.8,500 வரை கலால் வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
நிபுணர்கள் கூறுவதன்படி, இந்த புதிய வரி அமைப்பால் 75 முதல் 85 மில்லிமீட்டர் அளவிலான சிகரெட்டுகளின் மொத்த விலை 22 முதல் 28 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. தற்போது அந்த தாக்கமே சந்தை விலைகளில் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது.
இதன் பின்னணியில் நிஃப்டி எஃப்எம்சிஜி குறியீடும் சுமார் 2 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆரம்பத்தில் இந்த விலை உயர்வு விற்பனையில் சிறிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும், விலையை உயர்த்துவதன் மூலம் நிறுவனங்கள் தங்களின் லாபத்தை பாதுகாக்கும் என்று சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் வரி மற்றும் உற்பத்திச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்தால், எதிர்காலத்தில் சிகரெட் விலைகள் இன்னும் உயர வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் சிலர் குறைந்த விலை பிராண்டுகளுக்கு மாறலாம். மற்றவர்கள் புகைப்பழக்கத்தை குறைக்கவும் வாய்ப்பு உள்ளது.
சிகரெட் விலை உயர்வு என்பது சந்தை மட்டுமல்லாமல், மக்களின் வாழ்க்கை முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கிய பொருளாதார மாற்றமாக பார்க்கப்படுகிறது.

