சொந்தச் சகோதரரைத் தாக்கிய வழக்கில் புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி மனு தாக்கல் செய்த அமைச்சர் மரியவில்சனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
தன் சொந்தச் சகோதரரைத் தாக்கியதாக அமைச்சர் மரியவில்சன் மீது தொடரப்பட்ட வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்காக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அவர் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அமைச்சரின் கோரிக்கையை வன்மையாகக் கண்டித்து நிராகரித்துள்ளது.
விசாரணையின் போது கருத்து தெரிவித்த உயர்நீதிமன்றம், “அமைச்சர் மரியவில்சன் ஒன்றும் இங்கிலாந்தின் அரசர் அல்ல; சட்டத்திற்கு முன் அனைவரும் சமமே என்பதால், அவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக மாட்டேன் என்று கூற முடியாது” எனக் காரசாரமாகத் தெரிவித்தது. உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடி மற்றும் கடுமையான கண்டனம் சட்ட மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

