மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழக அரசியல் களம் குறித்து மிக ரகசியமான முறையில் ஒரு கள ஆய்வை மேற்கொண்டதாக ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் கசிந்துள்ளது.
இந்த ஆய்வின் முடிவுகள் பாஜக தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, வரும் சட்டமன்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக அந்த புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இருப்பினும், இந்த ரகசிய சர்வேயில் பாரதிய ஜனதா கட்சிக்கு மிக மோசமான ஒரு கணிப்பு கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் இத்தனை ஆண்டுகளாக கட்சி வளர்ச்சிக்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை என்பதும், வரும் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட பாஜக வெற்றி பெறுவது கடினம் என்பதும் அந்த அறிக்கையின் சாராம்சமாக இருப்பதாக தெரிகிறது. தாமரை மலரும் என்று நம்பிக்கொண்டிருந்த அக்கட்சியின் மூத்த தலைவர்களுக்கு, இது பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. இதனால் தமிழக பாஜகவின் எதிர்காலம் குறித்த கேள்விக்குறி தற்போது வலுவாக எழுந்துள்ளது.
அதேவேளையில், ஆளுங்கட்சியான திமுகவிற்கு இந்த தேர்தல் ஒரு மிகப்பெரிய பின்னடைவாக அமையும் என்று அந்த ஆய்வு எச்சரிக்கிறது. தற்போதைய ஆட்சிக்கு எதிராக நிலவும் அதிருப்தி அலைகளால் திமுக ஆட்சியை இழந்து, மீண்டும் எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டிய சூழல் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. திமுகவின் தோல்வி என்பது பாஜகவிற்கு ஒரு வகையில் மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், அதற்கு மாற்றாக பாஜக உருவெடுக்காமல் பழையபடி அதிமுகவே முன்னிலை பெறுவது அமித்ஷாவிற்கு ஒரு கசப்பான உண்மையாகவே பார்க்கப்படுகிறது.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகம் குறித்தும் இந்த ரகசிய ஆய்வில் சுவாரஸ்யமான தகவல்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. விஜய்யின் அரசியல் வருகை தமிழகத்தில் கணிசமான வாக்கு சதவீதத்தை நிச்சயம் பிரிக்கும் என்றும், குறிப்பாக இளைஞர்களின் வாக்குகளை அவர் கவர்வார் என்றும் கூறப்படுகிறது. ஆனால், அந்த வாக்குகள் சீட்டுகளாகவோ அல்லது வெற்றிகளாகவோ மாறுவதற்கு போதிய வாய்ப்புகள் இல்லை என்று அந்த ரிப்போர்ட் கூறுகிறது. அதிகபட்சமாக விஜய் மட்டுமே ஜெயிப்பார் என்பதுதான் அந்த சர்வேயின் சாரம்சம்.
இந்த ஒட்டுமொத்த ஆய்வு முடிவுகளும் அமித்ஷாவை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் திராவிட அரசியலுக்கு மாற்றாக ஒரு தேசிய சக்தியாக உருவெடுக்க வேண்டும் என்ற பாஜகவின் நீண்ட கால கனவு தற்போதைக்கு நிறைவேறாது என்பது இதன் மூலம் தெளிவாகிறது. அதிமுக மீண்டும் பலமான சக்தியாக உருவெடுப்பதும், பாஜகவால் ஒரு தொகுதியில் கூட கால் பதிக்க முடியாத நிலை நீடிப்பதும் கட்சியின் மேலிடத்திற்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. தமிழகத்தில் பாஜக நிமிரவே நிமிராதா என்ற கவலை அவர்களை ஆட்கொண்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை என்றாலும் ஒருவேளை இது உண்மையாக நடந்தால் மீண்டும் பாஜக, நோட்டாவுடன் போட்டியிட வேண்டிய நிலை தான் வரும்.

