தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவர் பாலு மகேந்திரா. கடந்த 1980களில் அவர் இயக்கிய பல படங்கள் இன்றும் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன.
இன்று நட்சத்திர இயக்குனர்களாக வலம் வரும் வெற்றிமாறன் பாலா ராம் சீனு ராமசாமி போன்றவர்கள் எல்லாம் பாலு மகேந்திராவின் சீடர்கள்தான் என்பது பலரும் அறியாத தகவலாகும்.
இயக்குனர் பாலு மகேந்திரா இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிகை ஸ்ரீதேவி நடிப்பில் கடந்த 1982ம் ஆண்டில் வெளியான படம் மூன்றாம் பிறை. இந்த படத்தில் நடிகை சில்க் ஸ்மிதாவும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இளையராஜா இசையில் கண்ணே கலைமானே பொன்மேனி உருகுதே பூங்காற்று புதிதானது பாடல்கள் இன்றும் ரசிக்கப்படுகின்றன.
இதில் கவியரசு கண்ணதாசன் கடைசியாக எழுதிய பாடல்தான் கண்ணே கலைமானே என்ற பாடல் என்ற சிறப்பும் உள்ளது. இந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகர் கமல்ஹாசன் முதன் முறையாக சிறந்த நடிகர் தேசிய விருது பெற்றார் என்பதும் கவனிக்கத்தக்கது.
மேலும் இந்த படத்தின் இயக்குனர் பாலுமகேந்திரா சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற தேசிய விருதும் பெற்றார். பிலிம்பேர் வழங்கிய சிறந்த இயக்குனர் விருதும் பாலுமகேந்திராவுக்கு மூன்றாம் பிறை படம் பெற்றுத் தந்தது. மேலும் தமிழ்நாடு அரசு விருதுகளும் இந்த படத்துக்கு கிடைத்தது. ஓராண்டுக்கு மேல் தியேட்டரில் ஓடிய தமிழ் படங்களில் இதுவும் ஒன்றாகும்.
ஊட்டியில் ஒரு தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் கமல்ஹாசன். யாருடைய ஆதரவும் இல்லாதவர். அவரிடம் மனநலம் பாதிக்கப்பட்ட ஸ்ரீதேவி வந்து சேருகிறார். ஆதரவற்ற அவருக்கு கமல் அடைக்கலம் தந்து பராமரிக்கிறார். ஒரு கட்டத்தில் அவரை காதலிக்கவும் செய்கிறார். ஆனால் இறுதியில் மனநலம் தெளிவாகி குணமடைந்து விடும் ஸ்ரீதேவி, கமலை யார் என்றே தெரியாமல் மறந்த நிலையில் விட்டு விட்டு செல்வதுதான் இந்த படத்தின் கதை.
மூன்றாம் பிறை படம் வெளியாகி 44 ஆண்டுகள் ஆன நிலையில் இன்றும் எவர்கிரீன் கல்ட் கிளாசிக் படமாக மூன்றாம் பிறை படம் உள்ளது. டிஜிட்டல் முறையில் நவீன தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்ட மூன்றாம் பிறை படம் இப்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நாளை மே 1ம் தேதி வெளியாக உள்ளது.

