சமீபத்தில் தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் கே பாக்யராஜ் மாரடைப்பால் காலமானார். அவரிடம் உதவி இயக்குனராக ஆரம்ப காலத்தில் பணிபுரிந்தவர் பார்த்திபன்.
தாவணிக்கனவுகள் என்ற படத்தில் நடிகர் சிவாஜி கணேசன் உடன் நடிக்கும் வாய்ப்பையும் பாக்யராஜ் தனது சீடர் பார்த்திபனுக்கு வழங்கியிருந்தார்.
இந்நிலையில் கே பாக்யராஜ் மறைவின் போது சீடர் என்ற முறையில் தனது குருநாதர் மறைவுக்கு தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் கடமைகளையும் அந்த நேரத்தில் செய்து அதிக கவனம் பெற்றார் நடிகர் பார்த்திபன். அவருடன் நடிகர் சரத்குமாரும் முழு அளவில் கடமையாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் பார்த்திபன் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, பாக்யராஜ் சார் பற்றிய என்னுடைய நேர்காணல்களில் மனிதாபிமானமற்ற ஒரு மனிதன் கக்கிய விஷத்தை பற்றியும் அதனால் ஏற்பட்ட வருத்தத்தை பற்றியும் அந்த விஷமியின் பெயர் குறிப்பிடாமலே பேசி இருந்தேன்.
அந்த நபர் இவராக இருப்பாரோ என்ற யூகத்தில் சிலர் தவறுதலாக என்னுடைய மரியாதைக்குரிய இயக்குனர்கள் பாண்டியராஜன் மற்றும் ஆர் சுந்தர்ராஜன் ஆகியோர் மீது கோபமான கருத்துக்களை பதிவிட்டு இருப்பதாக அறிந்து மிகவும் வருந்துகிறேன். அந்த நாகரிகமற்ற நண்பரின் பெயர் யாருக்கும் தெரியாமலேயே போகட்டும். கூடவே என் நினைவு பெட்டகத்தில் இருந்தும் அவர் கக்கியய விஷமும் கரைந்து போகட்டும்.
நல்லதை மட்டும் நினைவில் கொள்வோம். இன்று ஒரு நற்செய்தி. தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் எழுத்தின் வெளிச்சத்திற்கு விளக்கேற்றப்பட்டது. நான் என் விருப்பத்தை விண்ணப்பமாக எழுதி ஒரு பெரிய அறிவிப்பு பலகையில் இடம்பெற செய்து எடுத்துச் சென்றேன். ஏக மனதாக அனைவரும் ஒப்புக்கொண்ட அந்த விண்ணப்பம் என்னவென்றால், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் நிரந்தர கௌரவ தலைவர் கே பாக்யராஜ் என்பதே.
இனி ஆண்டாண்டு காலமானாலும் அது அப்படியே நிலைத்திருக்கும். கூடவே அந்த சங்கத்திற்கு புதிதாக எழுப்பப்படும் கட்டடத்திற்கு என் குருவின் பெயர் சூட்டப்படும் என்பது மகிழ்ச்சியான செய்தி. அதற்காக 247 எழுத்துக்களை கோர்த்து ஒரு மாலையாக்கி சங்கத்தின் அங்கத்தினருக்கு சூட்டி என் மகிழ்ச்சியை நன்றியுடன் காணிக்கையாக்குகிறேன் என்று அந்த பதிவில் இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் கூறியிருக்கிறார்.

