நடிகர் சூர்யா நடித்த மௌனம் பேசியதே படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அமீர். தொடர்ந்து நடிகர் கார்த்தி அறிமுகமான பருத்திவீரன் படத்தை அமீர் இயக்கினார்.
இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதில் முத்தழகு கேரக்டரில் நடித்த நடிகை பிரியாமணிக்கு சிறந்த நடிகை தேசிய விருதும் கிடைத்தது.
தொடர்ந்து திரைப்பட இயக்குனராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் நடிகராகவும் அமீர் கோலிவுட்டில் வலம் வருகிறார். மேலும் சினிமா சார்ந்தும் சினிமா நடிகர்கள் குறித்தும் வெளிப்படையான கருத்துகளை சொல்லும் இயக்குனர் அமீர், அவ்வப்போது தமிழக அரசியல் குறித்தும் தனது ஆவேசமான கருத்துகளை முன்வைக்கிறார்.
இதற்கிடையே பருத்திவீரன் படத்தயாரிப்பு விவகாரத்தில் ஞானவேல் ராஜாவுக்கும் அமீருக்கும் ஏற்பட்ட மோதலால் கடந்தாண்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பருத்திவீரன் படத்தை தயாரித்த வகையில் 1.5 கோடி ரூபாய் வரை அமீருக்கு தராத நிலையில் அதுகுறித்து வழக்கு விசாரணை கோர்ட்டில் நிலுவையில் இருந்தது. அதுகுறித்து அமீர் கூறிய நிலையில் அதற்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்த சில கருத்துகள் பெரிய விவகாரமாக மாறியது.
இந்த விவகாரத்தில் அமீர் குறித்து மட்டம் தட்டி பேசிய ஞானவேல் ராஜாவுக்கு இயக்குனர்கள் பாரதிராஜா கரு பழனியப்பன் சேரன் சமுத்திரக்கனி சசிக்குமார் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இறுதில் அவர் பேசியதற்கு வருத்தம் தெரிவித்து இருந்தார். ஆனால் அந்த பிரச்னை எல்லாம் ஓய்ந்த நிலையில் இப்போது புதிய பிரச்னை ஒன்று எழுந்துள்ளது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் அமீர், ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்ததும் அவரை நான் சந்தித்தேன். பின்பு அவர் தன்னை திருத்திக்கொண்டு அரசியலில் இருந்து விலகி மீண்டும் நடிக்கச் சென்றார். இன்றும் அதே போல விஜயும் அரசியல் பற்றி எதுவும் தெரியாமல் கட்சி ஆரம்பித்து இருக்கிறார்.
விஜயும் கட்சியை கலைத்து விட்டு சென்றால் அவருக்கு நல்லது என்று அமீர் கூறியதாக ஒரு தகவல் வெளியானது. இது மக்கள மத்தியில் பெரிய விவாதமாக மாறிய நிலையில். இதுகுறித்து பதில் அளித்துள்ள இயக்குனர் அமீர், அது போன்று நான் எதுவும் சொல்லவில்லை இது பொய்யான செய்தி என்று தனது விளக்கத்தை அளித்துள்ளார்.

