தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ஜானரை வகுத்துக்கொண்டு தனது ஆரம்பகால படங்களை தந்தவர் இயக்குனர் சுந்தர் சி.
உள்ளத்தை அள்ளித் தா மேட்டுக்குடி முறைமாமன் வின்னர் கிரி என அவர் இயக்கிய அந்த படங்கள் எல்லாமே காதல் காமெடி கவர்ச்சி குடும்ப சென்டிமென்ட் ஆக்சன் என பொழுதுபோக்கு அம்சங்களை மட்டுமே மையப்படுத்தி இருக்கும்.
அதே போல் திரில்லர் கதையம்சத்தில் உருவான அரண்மனை சீரிஸ் படங்களிலும் வழக்கமான தனது ஜானருடன் திரில்லரையும் பக்தியையும் கலந்து தந்திருப்பார் இயக்குனர் சுந்தர் சி. ஆனால் அவரது பாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு படமாக அவர் இயக்கிய படம்தான் அன்பே சிவம்.
நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாகவும் நடிகர்கள் மாதவன் நாசர் சந்தானபாரதி நடிகை கிரண் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் சுந்தர் சியின் வழக்கமான படங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் உருவான ஒரு படமாக இருந்தது. இந்த படம் திரையரங்குகளில் போதிய வரவேற்பை பெறாத நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு ரசிகர்கள் கொண்டாடும் ஒரு படமாக மாறியது.
சமீபத்தில் அன்பேம் சிவம் படம் குறித்து இயக்குனர் சுந்தர் சி ஒரு நேர்காணலில் கூறியதாவது, அன்பே சிவம் படத்தில் கமல் சார் போட்டுட்டு இருந்த கண் கண்ணாடியை நாம போட்டாலே தலை சுத்தும். கண்ணாடியோட பவர் சமம் பண்ண கண்ணுக்குள்ள ஒரு லென்ஸ். அந்த லென்ஸ் போட்டுட்டு சோடாபுட்டி கண்ணாடியில் பார்க்கணும்.
அந்த கண்ணாடியை போட்டுவிட்டு கீழே பார்த்தால் தலை சுத்தும். படத்துல அவர் நொண்டி நொண்டி நடப்பார். அதுக்காக ஒரு கால் ஷூ உயரமாய் இருக்கும். இன்னொரு கால் ஷூ உயரம் கம்மியா இருக்கும். அதை போட்டுட்டு நடக்கிறதும் ரொம்ப கஷ்டம். கமல் சார் இவ்வளவு கஷ்டப்பட்டு நடிக்கிறார் என்று நினைத்தேன்.
படத்துல அவருக்காக ஒரு சீன் வைக்கலாமுன்னு ஒரு சீன்ல மாதவன் கமல் சாரோட ஷூவை தூக்கி வீசிவிடுவார். நம்மளா அந்த காட்சியை வைத்து திணிக்க வேண்டாம். அவங்களா ஃபீல் பண்ணினால் ஓகே அப்படீன்னு கமல் சார் சொல்லிட்டார். ஆனாலும் படத்துக்கு அந்த சீன் தேவைப்பட்டது. அதனால் கமல் சொல்லியும் அந்த சீனை படத்தில் வைத்தேன் என்றும் டைரக்டர் சுந்தர் சி கூறியிருக்கிறார்.

