இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (எல்ஐகே) படம் வருகிற 10ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் கூறியதாவது, நடிகர் தனுஷை எனக்கு மிகவும் பிடிக்கும். நடிகர் என்பதையும் தாண்டி அவரை நான் உச்சத்தில் வைத்திருக்கிறேன்.
ஜூலை 28ம் தேதி தான் தனுஷின் பிறந்தநாள். அதே ஜூலை 28ம் தேதி தான் என்னுடைய அப்பா இறந்தார். அதனால் தனுஷிடம் என்னுடைய அப்பாவை நான் உணர்கிறேன். அந்த அளவுக்கு அவரை எனக்கு பிடிக்கும். ஆனால் சில நேரங்களில் சிலருடன் ஏன் நமக்கு முரண்பாடுகள் ஏற்படுகின்றன என்பது நமக்கே தெரியாது. அதுகுறித்து புரிந்து கொள்ளவும் முடியவில்லை.
சூழ்நிலைகள் அப்படி அமைந்துவிட்டன. தனுஷ் உடனான எனது நட்பு முறிவை என்னுடைய மிகப்பெரிய இழப்பாக பார்க்கிறேன். அதேசமயம் நல்ல நட்புறவுடன் இருக்கும் ஒருவரை நாம் இழக்கிறோம் என்றால் அதை அவமானமாகவும் பார்க்கிறேன். ஏதோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு தவறை செய்திருக்கிறேன். இன்று நான் இப்படி ஒரு இடத்தில் இங்கே இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் தனுஷ் தான்.
என்னுடைய இந்த நிலைக்கு அவர் முக்கியமான காரணம். வேலையில்லா பட்டதாரி படத்தின் படப்பிடிப்பின் போது 2 ஆண்டுகளுக்கு மேல் அவருடன் நான் இருந்திருக்கிறேன். அப்போது அவர் சாப்பிட்டால்தான் நான் சாப்பிடுவேன். அப்படியான ஒரு உறவில் இருந்தேன். இரண்டு பேருக்கும் இடையில் பிரச்சனை இருந்தால் பேசி சரி பண்ணலாம். பிரச்சனை இல்லாமல் விலகி இருந்தால் எப்படி சரி செய்வது? என்று இயககுனர் விக்னேஷ் சிவன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.
நடிகர் தனுஷ் தயாரித்த படம் நானும் ரவுடிதான். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார். அப்போது அந்த படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை நயன்தாராவை விக்னேஷ் சிவன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த படப்பிடிப்பு சமயத்தில் தான் தயாரிப்பாளரான தனுஷ், இயக்குனர் விக்னேஷ் சிவன் இடையே பிரச்சனை இருந்ததாக அப்போது பேசப்பட்டது. ஆனால் இருவரும் அதுபற்றி அப்போது எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையே விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமண ஆவணப் படத்தில் நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை விக்னேஷ் சிவன் நயன்தாரா அனுமதியில்லாமல் பயன்படுத்தியதாக நஷ்ட ஈடு கேட்டு தயாரிப்பாளர் தனுஷ் வழக்கு தொடர்ந்தார். அப்போதுதான் அவர்களுக்கு இடையே பிரச்சனை இருப்பதே வெளிச்சத்திற்கு வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

