இயக்குனர் கே பாக்யராஜிடம் பல படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ஆர் பாண்டியராஜன். அதன்பிறகு கன்னிராசி ஆண்பாவம் போன்ற படங்களை இயக்கி அவரும் இயக்குனராக மாறிவிட்டார்.
அத்துடன் பல படங்களில் காமெடி ஹீரோவாக நடித்தும் ரசிகா்களிடம் வரவேற்பை பெற்றார்.
பாண்டியராஜன் கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக இருந்த காலகட்டத்தில் எம்ஜிஆரின் தீவிர ஆதரவாளராக கே பாக்யராஜ் இருந்தார். அப்போது பாண்டியராஜனும் எம்ஜிஆர் மீது அதிக பற்று கொண்டிருந்தார். அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்த எம்ஜிஆரை பார்க்க கே பாக்யராஜ் போன போது, பாண்டியராஜனையும் அவர் உடன் அழைத்து சென்றிருந்தார்.
எப்போதுமே பாண்டியராஜனின் பிளஸ் பாயிண்டாக இருப்பது உருட்டி முழிக்கும் அவரது திருட்டு பார்வை தான். படத்திலேயே இதை காமெடி காட்சியாக மற்ற கேரக்டர்கள் பேசுவது போல் பாண்டியராஜனே வைத்திருப்பார். அந்தளவுக்கு அவர் தனது கேரக்டரை ஜாலியாக திரையில் காட்டுவார்.
புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகரான பாண்டியராஜனுக்கு எம்ஜிஆரை போலவே ஒரு பழக்கமும் உள்ளது. யாரையாவது பாராட்ட வேண்டும் என்றால், அவர்களுக்கு தனது அன்பு பரிசாக எம்ஜிஆர் தனது கையில் கட்டியிருக்கும் வாட்சை கழட்டி கொடுத்து விடுவார். சில நேரங்களில் அவரே கட்டியும் விடுவார். அதே பழக்கம் நடிகர் பாண்டியராஜனுக்கும் உள்ளது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் பாண்டியராஜன் கூறியதாவது, எனக்கு மகன் பிறந்திருந்தான். அந்த செய்தியை பத்திரிகைகளில் பார்த்து தெரிந்துக்கொண்ட எம்ஜிஆர் எனக்கு போன் பண்ணினார். மகன் பொறந்திருக்கான் போல வாழ்த்துக்கள் என்று சொன்னார்.
அப்புறம் பையன் உன்னை மாதிரியே முழிக்கிறானான்னு என்று கிண்டலாக கேட்டார். உனக்கு கல்யாணம் ஆகி எத்தனை நாள் ஆச்சுன்னு கேட்டார். நான் பத்து மாசம் ஆச்சுன்னு சொன்னேன். இந்த வேகம் எல்லாத்துலேயும் இருக்கட்டும் என்று சிரித்தபடி சொல்லிட்டு போனை வைத்து விட்டார் என்று நடிகர் பாண்டியராஜன் சந்தோஷமாக கூறியிருக்கிறார்.

