சரவணா ஸ்டோர் அண்ணாச்சி என அழைக்கப்படும் லெஜண்ட் அருள் சரவணன் நடித்த லீடர் படம் நாளை 3ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
கொடி கருடன் உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள லீடர் படத்தை லெஜண்ட் அருள் சரவணன் சொந்தமாக தயாரித்துள்ளார்.
லீடர் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த விழாவில் லீடர் படத்தில் நடித்துள்ள நடிகர் ஷாம் பேசியதாவது, கருடன் படத்தை பார்த்த பிறகு என் நண்பர்களிடம் இந்த படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று என் ஆசையை பகிர்ந்து கொண்டேன்.
அந்த படத்தில் எல்லா கேரக்டர்களையும் அவர் மிகச் சரியாக கையாண்டு இருக்கிறார். இதை சொன்ன சில நாட்களில் இயக்குனர் துரை செந்தில்குமாிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. பிறகு நேரில் சந்தித்துக் கொண்டோம். அவரிடம் நான் கதையைப் பற்றி கேட்கவில்லை. ஏனென்றால் தமிழ் சினிமாவில் மிகவும் பொறுப்புணர்ச்சி மிக்க ஒரு இயக்குனர்.
அவர் இயக்கிய அனைத்து படங்களிலும் ஒரு கமர்சியல் வேல்யூ இருக்கும். அழகான மெசேஜூம் இருக்கும். சினிமா பிளாட்பாஃர்மை மிகத் தரமாக பயன்படுத்திக் கொண்ட இயக்குனர்களில் துரை செந்தில்குமார் மிக முக்கியமானவர். இந்த படத்திற்காக டப்பிங் பேசும்போது எல்லா கேரக்டருக்கும் அவரே டப்பிங் பேசி வைத்திருந்தார்.
இதுதான் எனக்கு வேண்டும் என்பதில் அவர் அவ்வளவு தெளிவாக இருந்தார். இதை இங்கு யாரும் செய்ய மாட்டார்கள். எல்லோரும் லெஜண்ட் சரவணனின் மற்றொரு முகத்தை பார்த்து இருக்க மாட்டார்கள். படப்பிடிப்பு தளத்தில் நான் அவருடன் பணி செய்த நாட்களில் அவரின் சிறந்த நகைச்சுவை உணர்வு கலந்த பேச்சைக் கேட்டு மிகவும் ரசித்திருக்கிறேன். வாழ்க்கையை பற்றிய பெரிய கண்ணோட்டத்தை அவர் எப்போதும் வைத்திருக்கிறார். அதை அவர் தொடர்ந்து பின்பற்றுகிறார்.
அவருக்கு லீடர் இரண்டாவது படம். நிச்சயமாக அவர் சினிமாவில் தொடர்ந்து நீண்ட காலம் இருப்பார். நிறைய படங்களில் இன்னும் நடிப்பார். அவருடைய தயாரிப்பு மூலம் நிறைய இயக்குனர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அவரைப் போன்ற ஒரு தொலைநோக்கு பார்வை கொண்டவர் தமிழ் சினிமாவுக்கு மிகவும் அவசியம் தேவை என்று நடிகர் ஷாம் அந்த விழாவில் பேசியிருக்கிறார்.

